அரங்கேற்றம்: சோன்யா ஷங்கர்
ஆகஸ்ட் 5, 2017 அன்று சோன்யா ஷங்கரின் பரதநாட்டியம் மற்றும் மேற்கத்திய நடன அரங்கேற்றங்கள் நடந்தேறின. புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து "வாஜேம்ருதங்கதான" என்று மராட்டி கணபதி வந்தனப் பாடலுக்கு சோனியா அபிநயித்தது கனஜோர். லதாங்கிராக வர்ணத்தில் சிறப்பாக ஜதீஸ்வரங்களுடன் ஆடி, தில்லை நடராஜரைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார். "நாதர்முடி மேலிருக்கும்" பாடலுக்கு வளைந்தும், நெளிந்தும், தவழ்ந்தும், ஊர்ந்தும் ஆடிக் கரகோஷத்தைப் பெற்றார். இறுதியாக "த்ருபத்" நிகழ்ச்சியில் "ஸ, ரி, க, ம, ப, த, நி" என்ற ஏழு ஸ்வரங்களுக்கும் முறையே மயில், எருது, ஆடு, கிரௌஞ்சம், குயில், குதிரை, யானை ஆகியவற்றை அபிநயத்தில் கொணர்ந்த விதம் மிகச்சிறப்பாக இருந்தது. பூர்வி ராகப் பாடலுக்கு அபிநயித்தது மனநிறைவைத் தந்தது.

அடுத்த பாதி நிகழ்ச்சியில் Yoko's Dance Performing Arts Academy மாணவியான சோனியா குரு மேகன், எரினி இருவரிடமும் பயின்ற மேற்கத்திய மற்றும் பாலே நடனத்தை அநாயசமாக ஆடியவிதம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. சோனியா இளவயதிலேயே தனது தாயார் ராதிகா அவர்களிடம் பரதநாட்டியமும், பின்னர் பாலே நடனமும் கற்றுத் தேர்ந்து இருவித நிகழ்ச்சிகளையும் தந்தது பாராட்டத்தக்கது.

நிகழ்ச்சி சிறக்க உதவிய சிந்து நடராஜன் (குரலிசை), பிரியங்கா சாரி (வீணை), ஆதித்யா கணேஷ் (மிருதங்கம்) ஆகியோர் பாராட்டத்தக்கவர்கள்

சீதாதுரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com