அரங்கேற்றம்: பூமிகா குமார்
ஜூலை 23, 2017 அன்று செல்வி. பூமிகா குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் இந்தியாவின் பெங்களூரு மாநகரின் ஜே.எஸ்.எஸ். கலைமன்றத்தில் நடந்தேறியது.

இவரது குரு 'நாட்டியாஞ்சலி' நிறுவன இயக்குனர் திருமதி. ஜெயந்தி கட்ராஜு பாஸ்டனில் இருக்கிறார். சிஷ்யை இருப்பது டெக்சஸின் டாலஸ் நகரில். 'ஸ்கைப்' மூலமே பரதநாட்டியப் பயிற்சி நடந்தது. இன்னொரு விசேஷம். பதினாறு வயதான இந்த சிஷ்யை ஒன்பது ஆண்டுகள் தீவிரப் பயிற்சியின் முத்தாய்ப்பாக அரங்கேறினார்.

''கணநாயகா" பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. யோகி சுத்தானந்த பாரதியின் ஹம்சத்வனி ராக புஷ்பாஞ்சலி. தொடர்ந்தது அன்னமாச்சார்யாவின் தோடயமங்களம் .ராகமாலிகை, தாளமாலிகை கலவை பூமிகாவின் நிருத்யத்திற்கு சோபை சேர்த்தது. அவர் பிடித்த அடவுகளும் பிரமாதம். அடுத்து வந்த நரசிம்ம கவுத்துவத்தில், நர-சிம்ம கோல வேறுபாடுகளைத் தெளிவுற அபிநயித்துச் சித்திரித்தார் பூமிகா.

ஆபோஹி ராக ஜதீஸ்வரத்தில் குரு போதித்த கணீர் ஜதிகளை நன்கு கிரகித்து விறுவிறுப்புடன் ஆடி மகிழ்வித்தார் பூமிகா. லால்குடி ஜெயராமனின் ஷண்முகப்ரியா ராக வர்ணம் நடனமணியின் திறனுக்குச் சவால். பரதநாட்டியத்தில் பல்வேறு கலை அம்சங்களிலும் பெற்ற ஒருமித்த தேர்ச்சியை வெளிப்படுத்த அரிய வாய்ப்பும் ஆகும். அதில் பூமிகாவின் முகபாவனைகளும், ஜதி சுத்தமான அபிநயமும், ஏற்ற-இறக்க அசைவுகளும் அருமை. மொத்தத்தில் சாஹித்ய கர்த்தாவுக்கும்,போதித்த குருவிற்கும் பெருமை சேர்த்தார் பூமிகா.

பதங்களில் முதலில் வந்தது தயானந்த சரஸ்வதியின் ரேவதிராக "போசம்போ". அதனைத் தொடர்ந்து வந்த அம்பிகை வர்ணனை கிருதி முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்தான பாடல். புரந்தரதாஸரின் பதம் 'மார்க்கம் பலவானாலும் சேருமிடம் ஒன்றே' என்னும் ஏக இறைவன் தத்துவத்தை விளக்கும் கிருதியை அடுத்து, முத்தாய்ப்பாக டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா இயற்றிய கருடத்வனிராக தில்லானா வந்தது. இதில் பூமிகாவின் துரித ஜதிகள், ஏற்ற, இறக்க, மின்னல்வெட்டுத் திருப்பங்கள் ஏராளம். லாவகமாக தனது திறமையை வெளிப்படுத்திச் சபையோரின் கைதட்டலை அள்ளிக்கொண்டார்.

நட்டுவாங்கத்தில் குரு. ஜெயந்திக்குப் பக்கபலமாக, திருமதி. வசுதா சாஸ்திரி (வாய்ப்பாட்டு), திரு. ஹர்ஷ சமகா (மிருதங்கம்), திரு. மகேஷ் சுவாமி (புல்லாங்குழல்), திரு. டி. பிரசன்னகுமார் ஆகியோர் சிறப்பாகத் துணை போயினர்.

குரு ஜெயந்தி, சிஷ்யை பூமிகா இருவருமே கண்ணொளி வழங்கும் விஷன்' எயிட்' தொண்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சிறப்புத் தூதுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். ராமமூர்த்தி,
பாஸ்டன், மாசசூசெட்ஸ்

© TamilOnline.com