அரங்கேற்றம்: மேகனா
ஜூலை 9, 2017 அன்று போர்ட்லேண்ட் சில்வேனியா கலைமன்றத்தில் செல்வி. மேகனாவின் குச்சிப்புடி நடன அரங்கேற்றம் நடைபெற்றது.

பாலமுரளி கிருஷ்ணாவின் கணேச கௌத்துவத்துடன் நடனம் ஆரம்பித்தது. முத்துஸ்வாமி தீக்ஷிதரின் "ஆனந்த நடன பிரகாசம்" சிதம்பரம் உருவான கதையைச் சித்திரித்தது. பாடலுக்கு ஜதிகள் திரு. சங்கர் விஸ்வநாதன் அமைக்க, நடன அமைப்பு செய்திருந்தார் குரு அனுராதா கணேஷ். குச்சிப்புடி நடனத்துக்கே உரிய தாம்பாளத்தட்டை நளினமாக நகர்த்திக்கொண்டே ஆடும், ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் "நாதமுரளி கானவிலோல" பாடலுக்குக் கிருஷ்ணராகவும் ருக்மிணியாகவும் மாறிவிட்டார் மேகனா.

குச்சிப்புடி நடனத்தின் தனித்தன்மை வாய்ந்த "பாமகலாபம்" நாட்டிய நாடகம். இதில் நீண்ட பின்னலை அசைந்தாட மிடுக்கான நடையுடன் சத்ராஜித் மன்னரின் மகளான சத்யபாமாவான நான், கிருஷ்ணரின் மனம் கவர்ந்தவள், மென்மையானவள் என்று "பாமனே சத்யபாமனே" என்று பெருமிதத்தோடு ஆடுவதை மறக்க இயலாது. அடுத்து "தேவதேவம் பஜே" என்ற அன்னமய்யா கீர்த்தனை, பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் "நிருபமான சாமி" ஆகியவை மனதைக் கவர்ந்தன. முத்தாய்ப்பாக லால்குடி ஜெயரமன் அவர்களின் தில்லானா மேகனாவின் நிகழ்ச்சிக்கு மகுடமாக அமைந்தது. மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

பதினாறு வயதான மேகனா, 10 ஆண்டுகளாக நடனம் பயில்கிறார். பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும், தனது வெஸ்ட்வியூ பள்ளிப் போட்டிகளிலும் பங்குபெறும் சிறந்த மாணவி. குரு அனுராதா கணேஷ், டாக்டர். வேம்படி சின்னசத்தியத்தின் சிஷ்யையான திருமதி. சிட்டி துர்காதேவியின் மாணவி. பல்வேறு பரிசுகளும் இந்திய அரசின் உதவித்தொகையும் பெற்றவர். சென்னை தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

பக்கவாத்தியக் குழுவில் திருமதி லட்சுமியுடன், குமாரி பவானி கணேஷ், குமாரி ஹரிணி கணேஷ் இணைந்து பாடினர். குரு அனுராதா கணேஷ் (நட்டுவாங்கம்), திரு. வாசுதேவ் ரகுராம் (மிருதங்கம்), திரு. தேஜஸ்வி சக்ரவர்த்தி (புல்லாங்குழல்), திரு. ஆனந்த் ரங்கராஜன் (வயலின்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர். குரு அனுராதா போர்ட்லேண்டில் 'நர்த்தனா' என்ற நடனப்பள்ளியைத் திறம்பட நடத்தி வருகிறார்.

டாக்டர் கிருஷ்ணவேணி அருணாசலம்,
போர்ட்லண்ட், ஒரிகான்

© TamilOnline.com