அரங்கேற்றம்: அனன்யா பரத்வாஜ்
ஜூன் 17, 2017 அன்று, சாரடோகா மக்காஃபி நிகழ்கலை மையத்தில் ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி மாணவி அனன்யா பரத்வாஜின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. ஸ்ரீமஹா கணபதி எனும் கௌளை ராகப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து மதுரை முரளிதரன் அவர்களின் விநாயகர் வந்தனம், பிறகு அவரது ரஞ்சனி ராகப் பாடல் ஆகியவற்றுக்குச் சிறப்புற ஆடினார். ஆண்டவன் பிச்சை அவர்களின் லதாங்கி ராக 'நீ மனம் இரங்கி' என்னும் வர்ணத்திற்கு, குரு விஷால் ரமணி பாடலை விளக்கியபோது, மயில்வாகன முருகன், சூரபத்ம வதம், வள்ளி-தெய்வயானை திருமணம் ஆகியவற்றை முகபாவத்தில் சித்திரித்தது அருமை.

அடுத்து 'ஸ்ரீசக்ரராஜ' எனும் பாடலுக்கு "வந்தேமாதரம் அம்பிகாம்" என்பதை விருத்தமாகப் பாடியது உருக்கம். பாபநாசம் சிவனின் 'இடதுபதம் தூக்கி', பாடலுக்கு ஆடலரசனைக் கண்முன் கொண்டு நிறுத்தினார் லால்குடி ஜயராமன் தில்லானாவிற்கு விறுவிறுப்பாக ஆடினார். 'ஏறுமயில் ஏறி விளையாடு முகம்' திருப்புகழுக்கு ஆடி நிறைவுசெய்தார். அனன்யாவின் கலைப்பயணம் மேலும் சிறக்கட்டும்.

சீதாதுரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com