உச்சநீதிமன்றத்தின இடைக்காலத் தடை: தமிழகத்தில் 'பந்த்'
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, அதைப் பாராளுமன்றத்திலும் நிறை வேற்றியதோடு, நடைமுறைப் படுத்தவும் முடிவு எடுத்தது. இதை எதிர்த்து புகழ்பெற்ற AIMS மருத்துவர்களும் வேறு பல அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தை அணுகின. வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில், மத்திய அரசு இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்து அதற்கான சுற்றறிக்கையும் வெளியிட்டது. இறுதித் தீர்ப்பு வரும்வரை மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்ற மனு ஒன்றைப் பல்வேறு அமைப்புகள் தாக்கல் செய்தன.

இது குறித்து மார்ச் 29ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை அளித்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அர்ஜித் பசாயத், எல்.எஸ். பாண்டா ஆகியோர் மத்திய அரசின் இடஓதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காலத் தடைவிதித்தனர். '1931ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இதர பிற்படுத்தப் பட்டவர்களைப் பற்றி ஒரு முடிவு எடுப்பது சரியல்ல; இதன் அடிப் படையில் 27 சதவீகித இட ஒதுக்கீடு என்று நிர்ணயம் செய்வது ஏற்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பில் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.

தமிழக அரசியல் கட்சிகளிடையே இந்தத் தடை மிகப் பெரிய அதிர்ச்சியையும், கவலை¨யும் அளித்தது.

ஆளும் தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பங்கு வகிக்கும் கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி உடனடியாகக் கூட்டி இது குறித்து விவாதித்தார். இக்கூட்டத்தில் காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொண்டன. ஒருமனதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்தவும் முடிவு செய்யப் பட்டது. முடிவில் முக்கிய எதிர்க் கட்சிகளான அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை உச்சநீதிமன்ற இடைக்காலத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மேலும் இதுதொடர்பாக விவாதிக்க பாராளு மன்றத்தின் இருஅவைகளையும் உடனடி யாகக் கூட்ட வேண்டும் என்றும் அப்போது கேட்டுக்கொண்டது.

மார்ச் 31ம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அரசே நடத்திய இப்போராட்டத்தில் அன்று தமிழகம் முழுவதிலும் பணிகள் ஸ்தம்பித்தன. பஸ், ரயில், ஆட்டோ, லாரி எதுவும் ஓடவில்லை. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், சினிமா அரங்குகள் ஆகிய அனைத்தும் அன்று மூடப்பட்டன. 'பேராட்டம் முழு வெற்றி யடைந்தது' என்று முதல்வர் தெரிவித்தார்.

ஆனால் தமிழக அரசின் இந்த வேலைநிறுத்தம் வெறும் கண் துடைப்பு நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அ.தி.மு.க மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்காமல் தி.மு.க கூட்டணி கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டு எடுத்துள்ள 'பந்த்' முடிவு வெறும் கண்துடைப்பு நாடகம் என்று காட்டமாக குற்றம் சாட்டினார் ஜெயலலிதா.

இந்நிலையில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com