BATM: ஹார்வர்டு தமிழிருக்கைக்கு நிதி திரட்டும் விழா
ஏப்ரல் 29, 2017 அன்று, ICC அரங்கத்தில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டும் வகையில் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. இச்சீரிய முயற்சியைத் துவங்கிய Dr. விஜய் ஜானகிராமன் மற்றும் Dr. சுந்தரேசன் சம்பந்தம் ஆகியோர் தலைமையில், திரு. வெங்கடேசன் அசோக், திருமதி.சவிதா வைத்யநாதன், Dr. பாரதி மற்றும் திரு. ஜோனதன் ரிப்லீ சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினர்.

விஜய் ஜானகிராமன் மற்றும் சுந்தரேசன் சம்பந்தம் இம்முயற்சியைத் தாம் ஏன் தொடங்கினோம் என்பதை உணர்வுபூர்வமாக விளக்கினர். அடுத்துப் பேசிய தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஜோனதன் ரிப்லீயின் கன்னித்தமிழ்ப் பேச்சு அனைவரையும் கட்டிப்போட்டது. தமிழின்மேல் ஈர்ப்புற்ற காரணங்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அவர் தமிழ் பயின்ற அனுபவங்கள் முதல் மடப்புரம் காளியாத்தா கோவில் சென்று வந்ததுவரை, ஆங்கிலக் கலப்பு சிறிதும் இல்லாமல் வெகு சுவாரசியமாக விவரித்தார்.

தமிழிருக்கைக்கெனத் திரட்டப்பட்ட $300,000 தொகைக்கான காசோலையை, குணா பதக்கம் மற்றும் தமிழார்வலர்கள் இணைந்து சம்பந்தம், ஜானகிராமன், குமார் குமரப்பன் ஆகியோரிடம் வழங்கினர்.

மு. மருத பாண்டியன்

© TamilOnline.com