ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
மே 27, 2017 அன்று ஹூஸ்டன் பியர்லேண்ட் பகுதி மேற்கு இளநிலைப்பள்ளியில் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. இப்பள்ளி மாநகரத்தின் பியர்லேண்ட், கேட்டி, உட்லண்ட்ஸ், மேற்கு ஹூஸ்டன், சுகர்லேண்ட், மேற்கு கேட்டி என ஆறு கிளைகளில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. இவ்வருடம் 375க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றுத் திறனை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராகப் பென்சில்வேனியா பல்கலை தமிழ்த்துறைப் பேராசிரியர் வாசு ரெங்கநாதன் வருகை தந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. அடுத்து பள்ளித்தலைவர் கரு. மாணிக்கவாசகம் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் கேட்டி கிளை சிலப்பதிகாரம் மற்றும் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சியை வழங்கியது. மேற்கு ஹூஸ்டன் கிளை குடிநீரின் இன்றைய நிலையை படம்பிடித்துக் காட்டும் நிகழ்ச்சியை வழங்கியது. தொலைக்காட்சி நிகழ்வுகளாக மாணாக்கர் கலைத்திறனைத் தொகுத்துத் தந்தது உட்லண்ட்ஸ் கிளை. கீதம் இசைத்தது மேற்கு கேட்டி கிளை. பசுமையின் தேவையை உணர்த்திப் பரவசப்பட்டது சுகர்லேண்ட் கிளை. இறுதியாக, தமிழின் வட்டார வழக்குகளைப் பேசி மகிழ்ந்தது பியர்லேண்ட் கிளை.

செயலாளர் சங்கீதா நீலகண்டன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் தாமோதரன் நாராயணன் நிதிநிலை அறிக்கை வழங்கினார். தொடர்ந்து, பள்ளி மதிப்பீட்டுக் குழு குறித்த அறிக்கையை ஆலோசகர் ஜெகன் அண்ணாமலை வழங்கினார். தமிழ் மொழிக்கு டெக்சஸ் மாநில அளவிலான அங்கீகாரம் பெறுவதற்குரிய முயற்சிகள் எடுக்கப்படுவதை அவர் விளக்கிக் கூறினார். அண்மையில் அமைப்பின் சார்பில் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது குறித்து கோபால் கிருஷ்ணன் சிற்றுரை வழங்க, முத்து நடராஜன் விளக்கப் படத்துடன் வருங்காலத் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

பேரா. வாசு ரெங்கநாதன் ஆண்டு மலரை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார். அவருக்குப் பட்டயம் வழங்கி மரியாதை செய்தார் முன்னாள் பொருளாளர் பேரா. இராதாகிருஷ்ணன். பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய ஆசிரியைகள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. நிழற்படத் தொகுப்பினை பாலாஜி லெட்சுமணன் தலைமையிலான குழு திரையிட்டது. தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com