சிகாகோ: 'பெண்' அமைப்பு தொடக்கம்
மார்ச் 11, 2017 அன்று, சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிச் சிகாகோவில் 'பெண்' என்ற பெயரில் ஓர் புதிய அமைப்பொன்று தொடங்கப்பட்டது. தொடக்க விழா ஸ்ரீ பாலாஜி கோவில், (அரோரா, இல்லினாய்ஸ்) நடந்தது. 'பூவிதழ்; என்ற தமிழ் இதழும் அவ்வமயம் வெளியிடப்பட்டது. 250க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் விழாவில் பங்கேற்றனர்.

திருமதி. மினு பசுபதி, குமாரி. திவ்யா ஆனந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட விழா தொடங்கியது. பெரியவர் முதல் குழந்தைகள்வரை பலரும் வந்து குத்துவிளக்கு ஏற்றினர். திருமதி. லட்சுமி ஆனந்தன் வரவேற்புரை வழங்கினார். வந்திருந்தோர் ஒருவருடன் ஒருவர் அறிமுகமாவதற்கு, திருமதி. ரஞ்சனி வரதன் ஏற்பாடு செய்திருந்த 'அக்கம் பக்கம்', 'ஜவ்வு மிட்டாய்' விளையாட்டுக்கள் கலகலப்பை ஏற்படுத்தின. திருமதியர் சுஜாதா பரத்வாஜ், ஆர்த்தி ரமேஷ், சுசீலா ராஜேஷ், அனுபமா கிருஷ்ணன் ஆகியோர் இதனைச் சுவைபடச் செய்தனர்.

முனைவர் பூமா சுந்தர் நல்லுணவு குறித்தும், திருமதி. மாதங்கி 'வேலையும் வாழ்க்கையும் சமன் செய்து வாழ்வது குறித்தும், திருமதி. ஸ்ரீ குருசாமி சொந்தப் பிரச்சனைகளுக்கு உதவி கோரல் குறித்தும் பேசினர். 'பூவிதழ்' முதல் பிரதியைத் திருமதி. லட்சுமி ஸ்ரீனிவாசனும் திருமதி. தேவி அண்ணாமலையும் சிகாகோவில் தமிழ்க்குடும்ப முன்னோடி முனைவர் கமலா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கினர்.

அடுத்துவந்த கருத்தரங்கம், 'என் வீடு, என் வேலை, என் வாழ்க்கை' என்ற தலைப்பில் நடந்தது. திருமதியர் ராஜி விவேக், சித்ரா சூசை, ரஞ்சனி அய்யங்கார், இந்திரா கௌசிக், ரமா ரகுராமன், கோமதி தெய்வநாயகம் இதில் பங்கேற்றுப் பேசினர். திருமதி. தேவி அண்ணாமலை வழங்கிய நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.

மீனா ரெங்கராஜன்,
சிகாகோ

© TamilOnline.com