விவேகானந்தர் வாழ்வில்: பொன்னாகிப் போன திருடன்
காஜிப்பூரின் கங்கைக் கரையில் ஒரு மகான் வாழ்ந்துவந்தார். ஒருநாள் ஒரு திருடன் அவரது இல்லத்தில் நுழைந்துவிட்டான். பல பக்தர்கள் அவருக்குக் காணிக்கைகளைச் சமர்ப்பிப்பதைப் பலநாட்களாகவே கவனித்து வந்தான். அதனால் அங்கே ஏராளமான பொக்கிஷம் இருக்குமென்று அவன் நினைத்தான். அவன் நுழைந்ததும் முதல் அறையில் இருந்த பாத்திரங்களைத் தனது சாக்குப்பையில் போடத் தொடங்கினான். அதனால் சத்தம் எழும்பியது.

"இதென்ன, ஏதேனும் விலங்கு நுழைந்துவிட்டதா?" என்று நினைத்த மகான் தியானத்திலிருந்து கண் விழித்துப் பார்த்தார். அங்கே ஒரு வாட்டசாட்டமான மனிதன் நின்றிருந்தான். அவர் கண் விழித்ததைப் பார்த்த திருடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். உடனே அந்த மகான் தன் கையில் அந்தப் பாத்திரங்கள் நிரம்பிய சாக்கை எடுத்துக்கொண்டு அவன் பின்னே, "நில், நில்" என்று கத்தியபடி ஓடினார். திருடனை அணுகியதும் அவர், "ஏன் பயப்படுகிறாய்? இவை உனக்குத்தான். இன்னும் வேண்டுமானாலும் தருகிறேன்" என்று கூறினார். தன் வீட்டிலிருந்த எல்லாப் பொருள்களையும் கொடுத்து அவர் திருடனை அனுப்பிவைத்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னால், சுவாமி விவேகானந்தர் பத்ரி, கேதார் போன்ற தலங்களுக்குப் புண்ணிய யாத்திரை போய்க்கொண்டிருந்தார். அப்போது மிகக்குளிரான பிரதேசம் ஒன்றில் ஒரு சாதுவைப் பார்த்தார். அப்போதெல்லாம் பயணம் மிகக் கடினம். சரியான பாதையோ வசதிகளோ இருக்காது. மிகவும் சிரமத்துடன் அவர் போய்க்கொண்டிருந்தார். பரிதாபமாக ஒரு சாது பனிக்குளிரில் படுத்துக் கிடப்பதைப் பார்த்தார். தனது கம்பளத்தை எடுத்து அவருக்குப் போர்த்திவிட்டார். அந்தச் சாது கண்விழித்துப் பார்த்துவிட்டு, தனக்குப் போர்த்தியவரும் ஒரு சன்னியாசி என்பதைக் கண்டார். உடனே தனது பழைய வாழ்க்கையைப் பற்றி விவேகானந்தருக்குக் கூறினார்.

"நீங்கள் பவஹாரி பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?" என்று அவர் தொடங்கினார். பிறகு முன்னர் பாபாவின் வீட்டில் திருடன் போன சம்பவத்தை விவரித்தார். "நான்தான் அந்தத் திருடன். எந்தக் கணத்தில் என்னை அந்த மகான் தொட்டாரோ, அப்போதே என் வாழ்க்கை மாறிப்போனது. எனது திருட்டுச் செயலுக்கு நான் மிகவும் வருந்தினேன். நான் என் பாவங்களுக்குக் கழுவாய் தேட முயன்றுகொண்டிருக்கிறேன்" என்று அவர் முடித்தார். மகான்களின் சக்தி அளவற்றது. 'எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார்' என்கிற எண்ணமே நம்மைக் கடவுளோடு தொடர்புபடுத்திவிடும்.

(ஜனவரி 12ம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினம்.)

© TamilOnline.com