கவிஞர் இன்குலாப்
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த இன்குலாப் சென்னையில் காலமானார். இயற்பெயர் சாகுல் ஹமீது. கீழக்கரையில் பிறந்த இவர், சிவகங்கை மன்னர் கல்லூரியில் பயின்றார். உடன் பயின்ற கவிஞர் மீராவுடனான நட்பு இவருக்குக் கவிதை ஆர்வம் முகிழ்க்கக் காரணமானது. மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை படித்தவர் சென்னை புதுக்கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் மீதான ஈர்ப்பால் அவர்களது கூட்டங்களில் உரையாற்றினார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். புரட்சி இயக்கங்களின்மீது அபிமானம் கொண்டு இயங்கினார். புரட்சிக் கருத்துக்கள் கொண்ட பல பாடல்களை இயற்றியிருக்கிறார். 'மனுசங்கடா, நாங்க மனுசங்கடா..' என்னும் இவரது பாடல் அக்காலத்தில் மேடைதோறும் முழங்கியது. இவரது, 'சூரியனைச் சுமப்பவர்கள்' என்னும் கவிதைத் தொகுப்பு முக்கியமானது. நாடகங்கள் சில எழுதியிருக்கிறார். கவிதைகள் தொகுக்கப்பட்டு 'ஒவ்வொரு புல்லையும்..' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியிருக்கிறது. சிற்பி விருது, கவிஞர் வைரமுத்து விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். இன்குலாப்பிற்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மக்கள் கவிஞருக்கு தென்றலின் அஞ்சலி!



© TamilOnline.com