டிசம்பர் 2016: வாசகர் கடிதம்
16வது ஆண்டுவிழா கொண்டாடும் தென்றல் வெள்ளி, தங்க, வைர, நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடி அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் பரவ வாழ்த்துகிறேன். சரஸ்வதி ராம்நாத் அவர்களது இலக்கியப் பணியை அறிமுகப்படுத்தியது அருமை. அவர் மொழிபெயர்த்த 'தர்பாரி ராகம்' நாவலின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தது அருமையிலும் அருமை. டாக்டர் பாரதி சங்கர ராஜுலுவுக்கு வால்ட் டிஸ்னி விருது கிடைத்தது பெருமைக்குரியது.

- ஆர். கிருஷ்ணன்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

*****


Sweet Sixteen நிறைவுற்ற தென்றலுக்கு அன்பான வாழ்த்துக்கள் இப்போதுதான் தென்றல் ஆரம்பமானதுபோல் தோன்றுகின்றது! போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தென்றல் மட்டும், தமிழர்களுக்காக, தமிழ்மொழியில் தனித்தன்மையுடன் அனைவரும் விரும்பிப் படிக்கும் சுவாரசியமான பத்திரிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றது. எத்தனையோ இன்னல்களுக்கிடையே இங்கு வாழும் தமிழ்மக்கள் தம்மையும், தமிழ்ப் பள்ளிகளையும் படிப்படியாக வளர்த்துவரும் விந்தைகளைத் தென்றல் மூலம்தான் தெரிந்துகொண்டோம் .

திறமைகளினால் உயர்பதவிகளில் அமர்ந்துள்ள தமிழர்களைப்பற்றிய தகவல் தரும் ஓரே பத்திரிகை தென்றல்தான். தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய, அதிகம் பேசப்படாத முன்னோடிகள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பற்றிய விவரங்களும் அவர்களின் படிக்கக் கிடைக்காத படைப்புக்களும் தென்றல் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள்.

மற்றுமொரு சரித்திரம் படைப்பதற்காக 17ம் ஆண்டு துவங்கும் தென்றலுக்கு மனமார்ந்த அன்புகலந்த வாழ்த்துக்கள்.

- சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com