சிகாகோ: தங்கமுருகன் விழா
டிசம்பர் 10, 2016 சனிக்கிழமையன்று சிகாகோ பெருநகர் இந்துக் கோவிலில் தங்கமுருகன் விழா நிகழவுள்ளது. இவ்விழா பதினைந்து ஆண்டுகளாகத் திரு. கோபாலகிருஷ்ணன் இராமசாமி அவர்கள் தலைமையில் நடந்துவருகிறது.

திருப்பள்ளியெழுச்சி மற்றும் முருகன் அபிஷேகத்துடன் காலை ஏழு மணியளவில் தொடங்கி இரவு ஒன்பதரை மணிவரை தொடர்ந்து பற்பல கலைநிகழ்ச்சிகளுடன் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிறுவர்முதல் பெரியோர்வரை சுமார் 350 பேர் திருமுருகனைப் பாடி, ஆடி, அவன் மகிமை பேசி, இசை, வாத்தியம், பஜனை என்று பலவாறு தங்கமுருகனுக்கு விழாக் காணவுள்ளனர். இந்த வருடச் சிறப்பு விருந்தினராகத் தமிழகத்திலிருந்து 'கலைமாமணி' திருமதி. தேச மங்கையர்க்கரசி கலந்துகொள்கிறார். சிறந்த சொற்பொழிவாளரும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவியுமான இவர் முருகனைப்பற்றிச் சொற்பொழிவாற்றவுள்ளார். மறுநாள் காலை (ஞாயிற்றுக்கிழமை) பத்து முதல் ஒரு மணிவரை வள்ளி சுப்பிரமணியர் கல்யாணமும் நடைபெறவிருக்கிறது.

இவ்வாண்டின் சிறப்புக் கருத்து திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். அன்பர்கள் வந்திருந்து அருளமுதம் பருகுக.

குமார்,
சிகாகோ

© TamilOnline.com