சுவாமி சுகபோதானந்தாவின் கீதை காட்டும் வழி
'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா ஜூலை, 2005-ல் சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி மற்றும் டெக்சாஸ்-டல்லஸ் நகரங்களில் கீதைச் சொற்பொழிவுகள் வழங்கினார். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளை மிகவும் எளிமையாக எடுத்துக் கூறுவதில் வல்லவரான சுவாமி சுகபோதானந்தா, தமக்கே உரிய நடையில் இரண்டாம் அத்தியாயமான ஞான யோகத்திலிருந்து பல சுலோகங்களுக்கு விளக்கம் அளித்ததோடு, நம் வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதில் அவை எத்தகைய பங்கு வகுக்கின்றன என்றும் மிகத் தெளிவாக உரையாற்றினார். வளைகுடாப் பகுதியில் மில்பிடாஸ் சமணர் கோவிலில் (ஜெயின்) நடைபெற்ற அவரது சொற்பொழிவைக் கேட்க ஐநூறுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். சுவாமிஜியின் கீதைச் சொற்பொழிவுக்கு இடையே அவ்வப்போது அவரது மாணவர்கள் மனமுருகிப் பாடிய பாடல்கள் தென்றலெனத் தவழ்ந்து சென்றன.

சுவாமிஜி அவர்கள், மவுண்டன் வியூ East West புத்தக நிலையத்தில் நடைபெற்ற பயிலரங்கில் மன அழுத்தம் நிரம்பிய இக்கால வாழ்க்கைக்குத் தேவையான உத்திகளை வழங்கினார். பழக்க தோஷத்தால் நம்மோடு தங்கி விட்ட செக்கு மாட்டு எண்ணங்களை விட்டுவிட்டு, அன்பான, சந்தோஷமான, சுதந்திர உணர்வை தரக்கூடிய தரமான எண்ணங்களைத் தேர்வு செய்ய ஆரம்பிக்க வேண்டும். அது ஒரு தரமான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்கும் என்று சுவாமிஜி கூறினார். அதைக் கடைபிடிக்க shopping mall உத்தியையும் கூறினார். எண்ணங் களை 'விலை அட்டை' மாட்டிக் கடையில் தொங்கும் பொருள்களாகப் பார்க்கப் பழகிக் கொண்டோமானால், தேவையான எண்ணங்களை மட்டுமே தேர்வு செய்து பயனில்லாதவற்றை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிப்போம் என்கிறார் சுவாமிஜி.

சுவாமி சுகபோதானந்தாவின் மாலை வேளைச் சத்சங்கங்கள் பெரும்பாலும் கேள்வி-பதில் என்ற முறையில் அமைந்திருந்தன. ஒவ்வொரு குடும்பமும் குடும்பம் சார்ந்த உரிமை (family belonging), அன்னியோன்யம் (family intimacy), பாதுகாப்பு (family security) இவற்றை வளர்க்க வேண்டும். மனம் விட்டுக் குடும்பத்தினர் தங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதே ஆழமான அன்பிற்குப் பாலமாக இருக்கும் என்று கூறுகிறார் சுவாமிஜி.

ஜுலை 18, 2005 அன்று இயற்கை எழில் கொஞ்சும் 'பிக் பேஸின்' (Big Basin) மலைப்பகுதியில் மாணவர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டார் சுவாமிஜி. அப்பொழுது சுவாமிஜி அவர்கள் நம்மையொருவர் வார்த்தைகளால் தாக்கினால் உடனே பதிலுக்குத் தாக்காமல் அமைதியாக அந்தச் சூழலுக்குத் தகுந்தவாறு செயல்படுங்கள். இதனால் உறவில் ஏற்படும் பிளவுகளைக் குறைக்கலாம். அந்த மனநிலையை அடைய தியானம், ஆழ்ந்த சீரான மூச்சு விடுதல் ஆகியவை பயன்படும் என்றார்.

மேலும் அறிய www.swamisukhabodhananda.org

சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அவரது சத்சங்கங்கள் பற்றி அறிய toshakila@hotmail அல்லது rajashrees@yahoo.comஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் ஊரில் கீதை வகுப்புகள், பயிலரங்குகள் நடத்த toshakila@gmail.com, prmadhav@vsnl.com இரண்டு முகவரிக்கும் மின்னஞ்சல் செய்யவும்.

மஹி சங்கரநாராயணன், ஷகிலா பானு

© TamilOnline.com