அரங்கேற்றம்: கௌரி நாராயண்
ஜூலை 30, 2016 அன்று 'சம்பிரதாய' குரு ஜெயந்தி கட்ராஜு அவர்களின் சிஷ்யை செல்வி. கௌரி நாராயணின் பரதநாட்டிய அரங்கேற்றம் நியூ ஹாம்ப்ஷயர் நாஷுவா உயர்நிலைப்பள்ளி கலைமன்றத்தில் நடந்தது.

தஞ்சை நால்வர் வகுத்த பத்ததியில் சிறிதும் வழுவாது அரங்கேற்ற நிகழ்ச்சி நிரலை வடிவமைத்திருந்தார் குரு ஜெயந்தி. சபா வந்தனம், நடராஜர், ஏனைய தெய்வங்கள், குரு, இசைக்கலைஞர்கள் மற்றும் சபையோருக்கு வணக்கம் தெரிவித்து அரங்கேற்றம் தொடங்கியது. தொடர்ந்து ஆதிசங்கரரின் சிவாஷ்டகம், மோஹன ராகம் கண்ட ஏக தாளத்தில் ரீங்கரித்தது. அடுத்து மிஸ்ரநடை அலாரிப்பு பிரமாதம். ஜதீஸ்வரம் பஹுதாரி ராகத்தில் பளிச்சென்று மின்னியது.

நிகழ்ச்சியின் நடுநாயக உருப்படியான பந்துவராளிராக வர்ணம் பரந்தாமனைப் போற்றுவதாகும். அடுத்து வந்த "ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி" (ராகமாலிகை), பாரதியாரின் "போற்றி போற்றி", பண்டிட் பீம்சென் ஜோஷியின் அபங்கம் (கலாவதி), மற்றும் பதங்கள் கௌரியின் நடனத் தேர்ச்சிக்குக் கட்டியம் கூறின. முத்தாய்ப்பாக மாண்ட் ராகத் தில்லானா (லால்குடி ஜெயராமன்) அரங்கேற்றத்தின் முத்தான உருப்படியாக அமைந்தது.

குரு. திருமதி. ஜெயந்தியின் நேர்த்தியான நட்டுவாங்கமும், பதம்பாடிய திருமதி. நீலா ராமானுஜாவின் பாடல்களும் பொலிவூட்டின. திரு. என்.ஜி. ரவியின் மிருதங்கம், திரு. கிருஷ்ண பிரசாத்தின் குழலிசை, திரு. பிரமாத் கிரணின் மெருகு ஒலியிசையும் நிகழ்ச்சிக்குப் பெரும்பலம். மொத்தத்தில் அரங்கேற்றம் ஒரு இனிய மாலைநேர நடன விருந்தாக அமைந்திருந்தது.

ராமமூர்த்தி,
நாஷுவா, நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com