ந்ருத்யகல்யா: 'பக்தபாலா'
மே 21, 2016 அன்று சான்ட க்ளாராவில் ந்ருத்யகல்யா டான்ஸ் கம்பெனி 'பக்தபாலா' என்ற தனது இரண்டாவது நாட்டிய நிகழ்ச்சியை வழங்கியது. ந்ருத்யகல்யாவின் கலை இயக்குனர் திருமதி. ஜனனி நாராயணன், மூத்த கலைஞர்கள் மற்றும் மாணவச் சிறார்களை இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

2014ல் 'பால்யா' என்ற முதல் படைப்பை ந்ருத்யகல்யா வழங்கியது. இவ்விரண்டு படைப்புகளுமே பொதுவாக இளம்நாயகர்கள், முனிவர்கள் மற்றும் புராணக் கதைகளின் முக்கிய கதாபாத்திரங்களைச் சித்திரிப்பவை.

முதலில் தொடங்கிய புஷ்பாஞ்சலி பெண் சிறார்களின் அணிவகுப்பாக அமைந்தது. அடுத்து வந்த இளைஞர்களின் நிகழ்ச்சி பொலிவாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. இதன் முடிவில் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் ஸ்ரீலக்ஷ்மியை 'ஓம் நமோ நாராயண' என்ற கோஷத்துடன் தரிசிக்க வைத்தது சிறப்பாக இருந்தது. அடுத்ததாக மூத்த கலைஞர்கள், ஸ்ரீலக்ஷ்மி மலர்ந்த தாமரை மலரிலும், ஸ்ரீமஹாவிஷ்ணு பாம்பணையில் சயனித்த கோலத்திலும் இருக்கும் காட்சியை வழங்கினர். இக்காட்சி படிப்படியாக நகர்ந்து, உற்பத்தி மற்றும் சம்ஹாரம் என்ற செயல்பாடுகளை விளக்கியது.

இசைக்குழுவினர் நிகழ்ச்சியின் இனிமையை மேம்படுத்தினர் என்பதில் ஐயமில்லை. திரு. ரவீந்திரபாரதி (மிருதங்கம்), திரு. அஷ்வின்குமார் (புல்லாங்குழல்), திரு. விக்ரம் ராம்குமார் (வயலின்) ஆகியோரின் பக்கவாத்தியம் நிகழ்ச்சிக்குப் பெரும்பலம். திருமதி. ஸ்நிக்தா வெங்கட்ரமணி வாய்ப்பாட்டும், திருமதி. சேதனா சாஸ்த்ரியின் நட்டுவாங்கமும் மிகச்சிறப்பு.

பிரகலாத வைபவத்தில் நரசிம்மரின் ஆக்ரோஷம், அதற்கு ஆட்படுவோரின் நடுக்கம் ஆகியன சிறப்பாக சித்திரிக்கப்பட்டன. அடுத்து வந்த துருவன் கதையில் துருவன் வெளியேறியதில் உத்தமனது மனவருத்தமும், துருவன் தியானம் செய்வதும் கச்சிதமாக இருந்தன. நாமதேவர் சரிதத்தில் அவருடன் விட்டலன் உரையாடும் காட்சி மனத்தை ஈர்த்தது.

அடுத்து, சிவபக்தர்களின் வரிசை. திருமதி. சேதனா சாஸ்த்ரியின் துதிப்பாடல்களின் பின்னணியில் சிவதத்துவங்கள் வெளிப்படுவதாய் அமைந்திருந்தது. மூத்த கலைஞர்கள் சிவபெருமானின் கைகளாகவும்,ஆபரணமாகவும், ஜீவர்களாகவும் வடிவமைந்து சிறப்புற செயல்பட்டனர். மார்கண்டேயன் வரலாறில் எமதர்மருக்கும் சிவபெருமானுக்குமான யுத்தக்காட்சி சிறப்பம்சமாகும். சண்டேச நாயனார், ஆனாய நாயனார் கதைகள் சிறப்பாக அமைந்திருந்தன.

தில்லானா சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் ந்ருத்யகல்யாவின் 'பக்தபாலா' மிக அழகான படைப்பு.

ஆதாரம்: திருமதி. பிரியாதாஸ் ஆங்கிலத்தில் எழுதிய விமர்சனம்.

© TamilOnline.com