கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
ரொறொன்ரோவில் 2016, ஜூன் 18ம் தேதி தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினாறாவது இயல்விருது விழா ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனைக்கான இயல்விருது திரு. இ. மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாக, 2003ல் உருவான தமிழ் விக்கிப்பீடியா, இன்று ஏறக்குறைய 90,000 கட்டுரைகளைக் கொண்ட கலைக்களஞ்சியமாக உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா சமுதாயத்தை முதல் பங்களிப்பாளராகத் தொடங்கி அதை ஆற்றல்வாய்ந்த குழுமமாக உருவாக்கியதே மயூரநாதனின் சாதனையாகும்.

தொடர்ந்து மற்றைய விருதுகளும் அறிவிக்கப்பட்டன. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட காலச்சுவடு அறக்கட்டளை 'கணிமை விருது' திரு. எஸ். ராஜாராமனுக்கு வழங்கப்பட்டது. புனைவிலக்கியப் பிரிவில் 'கண்டிவீரன்' சிறுகதை தொகுப்புக்காக திரு. ஷோபாசக்திக்கும்,

அபுனைவிலக்கியப் பிரிவில் 'குறுக்குவெட்டுகள்' நூலுக்காக திரு. அசோகமித்திரனுக்கும், கவிதைப் பிரிவில் 'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' என்ற தொகுப்புக்காக திரு. குமரகுருபரனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மொழிபெயர்ப்புப் பிரிவில் 'மிர்தாதின் புத்தகம்' நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த திரு. புவியரசுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு, திரு. தேவிபாரதியின் சிறுகதைகளை 'Farewell, Mahatma' என்ற தலைப்பில் மொழிபெயர்த்த திரு. என். கல்யாணராமனுக்கும், மாணவர் கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரை வரைந்த செல்வி. ரேணுகா மூர்த்திக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கியச் சிறப்பு விருதுகளை இவ்வருடம் திருமதி. பிரெண்டா பெக், திரு. சோ. பத்மநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவுக்குப் பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வந்து சிறப்பித்தார்கள்.

கா. அப்பாதுரை முத்துலிங்கம்,
கனடா

© TamilOnline.com