சாக்ரமென்டோ: மும்மூர்த்திகள் இசைவிழா
மே 21, 2016 அன்று சாக் பல்கலைக்கழகத்தின் காபிஸ்ட்ராநோ அரங்கத்தில் சாக்ரமென்டோ ஆராதனா சங்கீத மும்மூர்த்திகள் விழாவை நடத்தியது. சில ஆண்டுகளாகத் தியாகராஜ ஆராதனை விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சி சென்ற ஆண்டிலிருந்து மும்மூர்த்திகள் விழாவாக விரிவாக்கப்பட்டது.

விழா, குழலிசை வித்தகி சிக்கில் மைதிலி சந்திரசேகரின் 'சேதுலாரா' பாடலுடன் துவங்கியது. பின்னர் கர்நாடக இசை வித்வான் சிக்கில் குருசரண் வழியொட்டி தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் சேர்ந்திசையாக இசைக்கப்பட்டன. தொடர்ந்து சாக்ரமென்டோ மற்றும் விரிகுடாப்பகுதிகளில் உள்ள இசைப்பள்ளிகளிலிருந்து வந்த மாணவ, மாணவியர் மும்மூர்த்திகளின் கீர்த்தனங்களை நேர்த்தியாகப் பாடினர். மேலும் இசைக்கருவிகளிலும் தம் திறமையை வெளிப்படுத்தினர். தவிர, வளரும் கலைஞர்களின் தனி வீணை, வயலின் கச்சேரிகள் இடம்பெற்றன.

'சீர்காழி மூவர்' என்றழைக்கப்பட்ட முத்துத் தாண்டவர், அருணாசலக்கவி, மாரிமுத்தா பிள்ளை ஆகியோரின் பாடல்கள் பாடப்பட்டன. மற்றுமொரு சிறப்பு அம்சம், செளராஷ்டிர மும்மூர்த்திகளின் அறிமுகம். ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை முனை. அர்ச்சனா வெங்கடேசன் வழங்கினார். சிக்கில் குருசரண் செளராஷ்டிர மும்மூர்த்திகளான வெங்கடரமண பாகவதர், கவி வெங்கடசூரி, நாயகி சுவாமிகள் ஆகியோரின் கீர்த்தனைகளைப் பாடி விளக்கமளித்தார். அவை பஜனை சம்பிரதாயத்தை ஒட்டி இயற்றப்பட்டிருப்பது சிறப்பாகும். முத்தாய்ப்பாக, சங்கீதா சுவாமிநாதனின் இசைக்கச்சேரி சிறப்பாக நடந்தேறியது. வயலினிலில் வித்வான் சரவணபிரியன், மிருதங்கத்தில் கோபால் ரவீந்திரன் பக்கத்துணையாக இருந்தனர். விழாக்குழுவினரின் நன்றியுரையுடன் விழா முடிவுற்றது.

ரஜனி & கோபாலன்,
சாக்ரமென்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com