'மாதுர்ய சௌர்யம்' - நாட்டிய நிகழ்ச்சி
மார்ச் 26, 2016 அன்று மாலை 4:00 மணிமுதல் 7:00 மணிவரை மறக்கருணையின் இனிமை (தீவிர இரக்க குணத்தின் இனிமை) என்ற கருத்தை விளக்கும் 'மாதுர்ய சௌர்யம்' என்ற தலைப்பிலான பரதநாட்டிய நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் உள்ள சன்னிவேல் கம்யூனிட்டி சென்டர் தியேட்டரில் நடைபெற்றது. கலிஃபோர்னியாவின் சான் ஹோசே நகரிலுள்ள நிருத்யநிவேதன் கலைப்பள்ளி இயக்குனர் புவனா வெங்கடேஷ் பரதநாட்டியத்தில் வடிவமைத்து, அதனை தன் மகள் மற்றும் மாணவியான ஹர்ஷிதா வெங்கடேஷ் மூலம் அரங்கேற்றினார். இந்நிகழ்வு, மைத்ரி என்னும் லாபநோக்கற்ற அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தேவி சக்தியின் மீது தியான ஸ்லோகத்துக்கு ஹர்ஷிதா சக்தியைக் கண்முன் நிறுத்தினார். இதில் அவர் ஆடிய வித்யுத்ப்ரந்தம் என்ற கர்ணம் சிறப்பாக இருந்தது. கிருஷ்ணன்மீது அமைந்த கோபாலக பாஹிமாம் என்ற பாடலுக்கு, யசோதை, சுட்டிக் கண்ணன், குசேலர், விஷ்ணுவை ஆகிய பாத்திரங்களாகவே மாறிவிட்டார்.

மாதே என்ற வர்ணம் தேவி சாமுண்டேஸ்வரி மற்றும் மீனாட்சி அம்மன்மீது அமைந்திருந்தது. ஸ்ரீ சக்ரராஜ என்ற பாடலில் காமாக்ஷி, புவனேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி என்று அனைத்து தேவியரையும் தரிசிக்க வைத்தார். அடுத்து காளிங்க நர்த்தனத்தில் கண்ணன் காளிங்கனின் தலைமீது ஆடிய நடனம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. இந்த பாடலுக்குப் பொருத்தமாக புஜங்க கர்ணம் நடனத்தில் சர்ப்பம் சுழன்றாடியது அருமையாக வடிமைக்கப்பட்டிருந்தது. 'பிருந்தாவன் வேணு' என்ற அபங்கப் பாடலில் விட்டலனைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டார். நிகழ்ச்சி விறுவிறுப்பான பூர்வி தில்லானாவுடன் நிறைவெய்தியது.

சந்திரிகா பாய் (வாய்ப்பாட்டு), புவனா வெங்கடேஷ் (நடன இயக்கம், நட்டுவாங்கம்), பாலாஜி (மிருதங்கம்), விக்ரம் ரகுகுமார் (வயலின்) மற்றும் பிரசன்னா (புல்லாங்குழல்) ஆகியோர் நிகழ்வுக்கு அருமையாகப் பங்களித்தனர்.

மைத்ரியின் தலைவர் சோனியா பேலியா அமைப்பின் செயல்பாடுகளை அருமையாக விளக்கிப் பேசினார். மைத்ரிக்கு உதவத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப்பற்றி புவனா வெங்கடேஷ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com