டாலஸ்: சித்திரைத் திரு(தெரு)விழா
ஏப்ரல் 16, 2016 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கமும் Full House Entertainment அமைப்பும் இணைந்து சித்திரைத் திருவிழாவை நடத்தினர். இதில் கடைவீதி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவகங்கள் எனத் திரு(தெரு)விழாவை நினைவுபடுத்தும் வகையில் அமைத்திருந்தார்கள். கைவினைப் பொருட்கள், துணிக்கடைகள், தங்கமுலாம் பூசிய வெள்ளி ஆபரணங்கள் உட்பட வெவ்வேறு வகையான கடைகள் இடம்பெற்றிருந்தன.

முதலில் கொங்கு தமிழ்ப்பள்ளி மற்றும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்னர் கவிஞர் நா. முத்துக்குமார் வழங்கிய சிறப்புரையில் ஒவ்வொருவர் வீட்டிலும் சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை இருப்பதைப் போல் நூலக அறையையும் கட்டாயம் இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஹார்வார்டு பல்கலக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பதற்கான நிதிதிரட்டும் முயற்சி குறித்த அறிவிப்பை மருத்துவர். சுந்தரேசன் சம்மந்தம், திரு. பால்பாண்டியன் மற்றும் சங்கத்தலைவர். திரு. கால்டுவெல் வேள்நம்பி ஆகியோர் வழங்கினர். பின்னர், சங்கத்திற்கெனத் தனியிடம் வாங்கும் முயற்சியைத் தொடங்கப்போவதாகக் கால்டுவெல் அறிவித்தார்.

சொல்வேந்தர் சுகி சிவம் பேசுகையில் பேச்சாளன் என்பவன் எப்படியிருக்க வேண்டும் என்னும் விளக்கத்துடன் பேச்சைத் துவங்கினார். மேலும் நேற்று எனபது முடிந்து போனது, நாளை நிச்சயமற்றது, இன்றே நிலையானது எனவே இன்றைய நாளை நன்றாக மன நிறைவுடன் அனுபவித்து வாழுங்கள் என்றார். வழக்கறிஞர். சுமதி விடுதலை என்னும் தலைப்பிலும், திரு. மணிகண்டன் உயர உயர என்னும் தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து தொலைக்காட்சிப் புகழ் ரம்யா தொகுத்து வழங்க, மனோ, சித்ரா, விஜய்பிரகாஷ், நிகில் மேத்யூ, பார்வதி ஆகியோருடன் V#Sharp இசைக்குழுவினர் மற்றும் SoundO'Rama இணைந்து வழங்கிய மாபெரும் இசைநிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெற்றது. விழாவில் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com