CIF: சிவகாமியின் சபதம்.
பிப்ரவரி 27, 2016 அன்று கனடா கல்லூரியில், கேன்சர் இன்ஸ்டிட்யூட் பௌண்டேஷன் (Cancer Institute Foundation Inc.) அமைப்புக்கு நிதி திரட்டும் முகமாக அபிராமி ஃபைன் ஆர்ட்ஸ் அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாடகத்தைத் திருமதி. பாகீரதி சேஷப்பன் இயக்கத்தில் நடத்தியது.

விரிகுடாப்பகுதியில் இந்நாடகம் இரண்டாவது முறையாக அரங்கேறியது. வரலாற்று புனைவு நாடகம் என்பதால் நடிகர்களின் தேர்வில் இருந்து, அரங்க அமைப்பு, பின்னணி இசை, ஒளி அமைப்பு, நடிகர்களின் உடை அனைத்துமே மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. சிவகாமியாக நடித்த செல்வி. மீனாக்ஷி உயர்நிலைப் பள்ளி மாணவி. பரதம் பயில்வதால் நடிப்பும், பாவமும், நடனமும் இவரிடம் இயல்பாக வெளிப்பட்டன. வெகு சிறப்பாக கல்கியின் சிவகாமியைக் கண்முன்னே நிறுத்தினார். தோழியாக வந்த கமலி (அனன்யா), வீரர்கள் என அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளும், இவர்களை நடிக்கவைத்த இயக்குனரும் பாராட்டுக்குரியவர்கள்.

முதன்மைக் கதாபாத்திரம் மகேந்திர பல்லவராக வந்த சிவா மனம் கவர்ந்தார். அவர் பிக்‌ஷுவின் விஷக்கத்தி பாய்ந்து உடல் நலமில்லாமல் இருந்த காட்சிகளில், இவ்வளவு நல்லவரைக் குத்தி விட்டார்களே என்று பார்வையாளர்கள் அங்கலாய்த்தார்கள். நரசிம்ம பல்லவர் (சூர்யா), நாகநந்தி (ஸ்ரீகாந்த்), திருநாவுக்கரசர் (குணாபதக்கம்), பரஞ்சோதி (பார்த்தசாரதி ராம்), ஆயனர் (நிர்மல்), புவனமஹாதேவி (விசாலாக்ஷி), நரசிம்மரின் வாரிசுகள் (மஹதி, ஸ்ரீஹரி), மாமல்லரின் துணைவி (வசந்தி), கலிப்பகை (குமரகுரு) முதன்மந்திரி (இந்திரா தங்கசாமி), புலிகேசி (அகதீஸ்வரன்), புலிகேசியின் தளபதி (ரமேஷ் சத்யன்), வீரர்கள் (ரோஹன், சத்யா), குண்டோதரன் (தயா), சத்ருக்கனன் (சங்கர்), கிராம மணியமாக (சரண்யா) ஆகியோர் பாத்திரங்களாகவே மாறி நடித்திருந்தனர்.

நாடகத்தை எழுதி இயக்கியவர் பாகீரதி சேஷப்பன்; அரங்க நிர்வாகம் வேணு சுப்பிரமணியம்; இசை ஸ்ரீதரன் மைனர். சிறிதும் தொய்வின்றி ஒரு திரைப்படம்போலக் காட்சிகள் மற்றும் ஒளி அமைப்பு மாற்றங்களில் ஜாலம் செய்து, மக்களை இரண்டரை மணிநேரம் போவதே தெரியாமற் செய்தார் வேணு. ஸ்ரீதரன் மைனர் திரைப்பட இசை போன்று ஆறு பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசை கொடுத்து வசீகரித்தார். சிறுவன் கரன் மகேஷ் துணை கீபோர்ட் வாசித்து கலக்கினார். பின்னணி பாடியவர்கள் ஸ்ருதி கதிரேசன், ஸ்வேதா ஜெயகுமார், யாழினி குமரன். நித்யவதி சுந்தரேஷ் மேடை அலங்கரிப்பிலே புதுமெருகு ஏற்றினார். சாந்தி புகழ் ஆடை அலங்காரங்களுக்கு உதவினார். நாடகத்திற்கு உதவியவர்கள் கிரிஜா, லதா சுந்தர், கவிதா ரமேஷ், நாராயணன், எம்.எஸ். கிருஷ்ணன், கற்பகம் ராம்கி, சுசேதா, ஹேமா கண்ணன், அன்னபூர்ணா, சித்ரா அகத்தீஸ்வரன், சௌம்யா, பபிதா, மற்றும் மக்கள் தொடர்பு முருகன் மற்றும் சிவா சேஷப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

நாடகத்தின்மூலம் திரட்டப்பட்ட $15,000 அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

நித்யவதி சுந்தரேஷ் & பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com