ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா
டெக்சஸ் மாகாணம் ஹூஸ்டன் மாநகரில் இயங்கிவரும் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி டிசம்பர் மாதத்தில் ”திருக்குறள் திருவிழா” கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு திருவிழா டிசம்பர் 11, 12 மற்றும் ஜனவரி 9 தேதிகளில் முறையே கேட்டி, உட்லண்ட்ஸ், பியர்லேண்ட், வெஸ்ட் ஹூஸ்டன் மற்றும் சுகர்லேண்ட் தமிழ்ப்பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்றன. பங்குபெறும் மாணாக்கர்கள் குறள் ஒப்பிப்பதுடன், விளக்கத்தையும் கூறி ஒரு திருக்குறளுக்கு ஒரு டாலர் பரிசு பெறுகிறார். விளக்கமல்லாது கூறப்படும் குறள் ஒவ்வொன்றுக்கும் 50 சென்ட் வீதம் வழங்கப்படுகிறது. வெவ்வேறு வயதுப்பிரிவுகளில் அதிகக் குறட்பாக்கள் ஒப்பிக்கும் மாணாக்கர்களுக்கு, பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் (குறளுக்கு 2, பொருளுக்கு 2, தெளிவான உச்சரிப்புக்கு 1) முதல் மூன்று பரிசுகள் பள்ளி ஆண்டுவிழாவன்று வழங்கப்படுகின்றன.

இவ்விழாவில் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட சுமார் 250 மாணாக்கர்கள் பங்கேற்று, மொத்தம் 3000 அமெரிக்க டாலரைப் பரிசாகப் பெற்றனர். 25 மாணாக்கர்கள் 50க்கும் மேற்பட்ட குறட்பாக்களை ஒப்பித்தனர். முத்தாய்ப்பாக, பவித்ரா சந்திரசேகரன் என்னும் 11 வயது மாணவி 270 குறட்பாக்களை ஒப்பித்து 230 டாலருடன் சிறப்புப் பரிசையும் தட்டிச்சென்றார். சில பெற்றோர் தம் குழந்தைகள் பெற்றிருந்த பரிசுக்கு இணையாகப் பரிசு வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்தினர். அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் துயரகற்றத் தமிழ்ப்பள்ளி வெள்ளநிவாரண நிதியாக சுமார் 10,000 டாலர் கொடைநிதி பெற்று வழங்கியது. பல மாணாக்கர்கள் தமது பரிசுத்தொகையை இதற்கு வழங்கியது போற்றத்தக்கது.

திரு. முருகானந்தம் ஆறுமுகம் தலைமையிலான தன்னார்வலர் குழு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது.

© TamilOnline.com