சிகாகோ: தங்கமுருகன் விழா
டிசம்பர் 12, 2015 அன்று சிகாகோ லெமான்ட் திருக்கோவிலில், தங்கமுருகன் விழா 15ம் ஆண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீமுருகன் பள்ளியெழுச்சியுடன், பால் குடமெடுத்து, நன்னீராட்டி, கந்தரனுபூதி, சஷ்டி கவசம், திருப்புகழ் பாடி, சுப்ரமணிய சுவாமியை, வள்ளி தேவயானை சமேதராய் அலங்கரித்து புஷ்பகவிமானப் பல்லக்கில், காவடி ஆட்டம் மற்றும் நாதஸ்வரம் மேளதாளத்துடன் கோவிலின் ரதி அரங்க மேடைக்கு அழைத்து வந்தனர்.

காலை 9:30 மணிக்கு குத்துவிளக்கேற்றி விழா தொடங்கியது. அடுத்த பன்னிரண்டு மணி நேரம் தொடர்ந்து 60 விதமான காலை நிகழ்வுகளை நடத்தினார்கள். சங்கத் தமிழ்ப் புலவர் நக்கீரரை மையமாகக் கொண்டு இந்த வருட நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் முருகனைப் போற்றிக் கொண்டாடினார்கள்.

ஆறு வயதுக் குழந்தை நடனம், ஏழு வயதுச் சிறுமியின் வீணையிசை, நான்கு வயதுச் சிறுவன் SPBயைப் போல கரோகியில் முழு தமிழ்ப் பாட்டைத் தடையின்றிப் பாடியது, பால்மணம் மாறாக் குழந்தை முருகன் வேடந்தரித்து மேடையில் தத்தித்தத்தி ஓடியது எனப் பல நிகழ்ச்சிகள் வியக்க வைப்பனவாக இருந்தன. திருமுருகாற்றுப்படையைச் சிறுவர் சிறுமியர் பல கோணங்களில் விவரித்துப் பேசினர். சிறுவர்களுக்குப் போட்டியாகப் பெரியவர்களும், முருக கானம் பாடி, சொற்பொழிவாற்றி, வில்லுப்பாட்டில் நக்கீரர் கதையைக் கூறி பக்திப் பரவசம் ஊட்டினர்.

ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியை வழங்கும், நாட்டியப்பள்ளி, மற்றும் இசைப்பள்ளி ஆசிரியர்களை விழாக்கமிட்டி கெளரவித்தது. குழுவின் முன்னோடி திரு கோபாலகிருஷ்ணன் ராமஸ்வாமிக்கு, லெமான்ட் கோவில் தலைவர் பீமா ரெட்டி பொன்னாடை போர்த்தினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு நற்சான்றிதழுடன், பரிசுப் பொருளும் வழங்கப்பட்டன.

குழலி முத்து,
லெமான்ட், இல்லினாய்ஸ்

© TamilOnline.com