BTS: சிலிக்கன் வேல்லியில் 'சில்லு'
நவம்பர் 22, 2015 அன்று இரா. முருகனின் 'சில்லு' என்ற அறிவியல் புனைவுநாடகம் ஓலோனி அரங்கில் பாரதி தமிழ்ச் சங்கத்தால் மேடையேற்றப்பட்டது. சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் தேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் அரங்கேறி இது நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. க்ரியா கிரியேஷன்ஸ் மேடையேற்றிய இந்த நாடகத்தை தீபா ராமானுஜம் இயக்கியிருந்தார்.

பல நூறு வருடங்களுக்குப் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் அமைந்த கதை என்பதால் இந்த நாடகத்தில் உட்காரும் நாற்காலிமுதல், கையில் எடுத்துச் செல்லும் சிறுபொருட்கள் வரை அனைத்துமே சில்லுவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டன. பிரபல திரைப்படக் கலை இயக்குனர் V. செல்வகுமார் மேடை வடிவமைத்தார். ஆடை வடிவமைத்த 'விஸ்வரூபம்' ப்ரீதிகாந்தன், 3 ரோபாட்டுகள் உட்பட, கிட்டத்தட்ட 25 கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகள் தயார் செய்துகொடுத்தார். பிரபல இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் இசைப்பள்ளியில் பணிபுரிந்த, விரிகுடாப் பகுதியைச் சேர்ந்த கவிதா பாளிகா இசையமைத்திருந்தார். மாயாபுரி கிராஃபிக்ஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மேற்பார்வையில், கலை ரவி மற்றும் ஸ்ரேயா ஒளியமைப்பை நிர்வகித்தனர். ஒவ்வொரு நடிகரும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தனர். அரங்க அமைப்பு, ஒப்பனை அனைத்தும் நாடகத்தின் வெற்றியாக அமைந்திருந்தன.

பாரதி தமிழ் சங்க நிர்வாகிகள் உஷா அரவிந்தன், வெங்கடேஷ் பாபு, நித்யவதி சுந்தரேஷ், வேணு ரங்கநாதன் ஆகியோர் வரவேற்புரை மற்றும் நன்றி உரைகள் வழங்க சாஸ்தா மணி (Shasta foods), ராஜேஷ் சுப்பிரமணியம் (Embed Ur) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com