கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
தமிழ்த் திரையின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (86) சென்னையில் காலமானார். 1929ம் ஆண்டில், சீனிவாச நாயுடு-விஜயத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த கோபாலகிருஷ்ணனுக்குப் பள்ளியில் படிக்கும்போதே நாடக ஆர்வம் வந்துவிட்டது. சிறு சிறு நாடகங்களில் நடித்தும், கதை எழுதியும் திறனை வளர்த்துக் கொண்டார். 'எதிர்பாராதது' திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியதுடன் 'படிக்காத மேதை', 'குமுதம்' போன்ற படங்களுக்கு வசனம் எழுதித் தன்னை திரைக்கதை ஆசிரியராக நிலைநிறுத்திக் கொண்டார். 1963ல் இவர் இயக்கிய 'கற்பகம்' மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து படங்களை இயக்க பல வாய்ப்புக்கள் வந்தன. கற்பகம் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தினார். 'சித்தி', 'பணமா பாசமா', 'உயிரா மானமா', 'குலமா குணமா', 'கை கொடுத்த தெய்வம்', 'சாரதா', 'தெய்வத்தின் தெய்வம்', 'ஆதிபராசக்தி', 'குறத்தி மகன்' எனப் பல படங்கள் இவரது பேர்சொல்லும் படங்களாக அமைந்தன. தாஸ்தவெஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' நாவலைத் தழுவி இவர் எடுத்த 'என்னதான் முடிவு' திரைப்படம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த திரைப்படத்திற்காக இந்திய ஜனாதிபதி விருது போன்றவற்றைப் பெற்ற கோபாலகிருஷ்ணன், கமல்ஹாசன், விஜய்காந்த் போன்றோரை வைத்து இயக்கியும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இவர் நவம்பர் 14, 2015 அன்று காலமானார். நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என்று பன்முகங்கள் கொண்ட கே.எஸ்.ஜி. வெங்கடேஷ் இவரது மகன்.



© TamilOnline.com