வழக்குகளில் சிக்கிய எஸ்.ஜே. சூர்யா
இப்போது தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. தயாரிப்பாளர் தங்கர்பச்சான் விழா ஒன்றில் நடிகைகளைப் பற்றிக் கூறியவற்றை எதிர்த்து நடிகர், நடிகைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாகத் தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்கவே பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

அடுத்து தயாரிப்பாளர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வழக்குகளில் சிக்கித் தவிக்கிறார்.

இவருடன் சிம்ரன் நடித்து வெளிவந்த 'நியூ' படத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து, அப்படத்துக்கான தணிக்கை சான்றிதழையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படம் திரைக்கு வந்து நன்றாக ஓடி ஒருவருடம் ஆனபின் அதன் தணிக்கையை நீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்வது என்பது இதுதான் முதல்முறை. இது ஒட்டு மொத்த தணிக்கைக்குழுவுக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிற விஷயம் என்று கருத்து நிலவுகிறது.

எஸ்.ஜே. சூர்யாவின்மேல் தணிக்கைக் குழு பெண் அதிகாரி ஒருவரைத் தாக்க முயற்சித்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலும், தடையை மீறி நியூ படத்தின் ஆபாசக் காட்சிச் சுவரொட்டி குறித்துத் தொடரப்பட்ட வழக்கிலும் தற்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம்.

இதற்கிடையில் சூர்யாவின் 'அ...ஆ...' படம் தற்போது தமிழகம் எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com