அரங்கேற்றம்: சாத்விகா வீரவல்லி
செப்டம்பர் 12, 2015 அன்று, நேப்பர்வில்லில் இயங்கிவரும் பரதம் நடனப்பள்ளியின் நிறுவனர் குரு வனிதா வீரவல்லியின் மாணவியும், புதல்வியுமான செல்வி சாத்விகா வீரவல்லியின் பரதநாட்டிய அரங்கேற்றம், ஆஸ்விகோ மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. ஐந்து வயதுமுதல் நாட்டியம் பயின்றுவரும் சாத்விகாவின் சுத்தமான அபிநயங்கள், சட்டென மாறும் முகபாவங்கள், அழகான அசைவுகள் ஆகியவை காண்போரை நெகிழச் செய்தன.

மலஹரி புஷ்பாஞ்சலியும் வாகதீஸ்வரி ராகத்தில் சரஸ்வதி கௌத்துவமும் நிகழ்வைத் துவக்கிவைத்தன. சண்முகப்ரியாவில் அமைந்த லால்குடி ஜெயராமனின் பதவர்ணம் "தேவர் முனிவர் தொழும் பாதன்" நுட்பமான சஞ்சாரிகளை உள்ளடக்கியது. இந்த வர்ணத்தில் குசேலரின் குறை தீர்த்தலையும், பாற்கடலைக் கடைந்தபோது மோகினியாய் வந்து தேவர்களைக் காத்ததையும், மகாபலிக்கு உலகளந்ததையும், திருப்பதி பிரம்மோத்ஸவ உலாவின் பல்வேறு வாகனங்களையும் அபிநயித்தது கொள்ளை அழகு. "யசோதையின் துயரம்" நடனத்தில் பெரியாழ்வாரின் பாசுரங்களை ராக-தாள மாலிகையாகக் கோர்த்து, தானே வடிவமைத்து, கற்பனைகளுடன் ஆடியது சாத்விகாவின் கடின உழைப்புக்குச் சான்றாக அமைந்தது. கர்நாடக இசைக்கலைஞர் சூரியபிரகாஷ் மெட்டமைத்த நாட்டக்குறிஞ்சி ராக தில்லானாவை, தமக்கை சுதிக்ஷணா வீரவல்லி பாட, சாத்விகா கச்சிதமாக ஆடியது படுஜோர்.

கோமதிநாயகம் ரத்தினத்தின் பாடல், வனிதா வீரவல்லியின் நட்டுவாங்கம், சக்திவேல் முருகானந்தத்தின் மிருதங்கம், சிகாமணி நடராஜனின் வயலின் இசை, சுனில்குமாரின் குழலிசை என அனைத்துமே சிறப்பு.

ரங்கா,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com