டென்னசி: ஈஷா அகமுக அறிவியல் பயிற்சிக் கூடம்
2015 செப்டம்பர் 22-24 நாட்களில் டென்னசியிலுள்ள மக்மின்வில்லில் ஈஷா அகமுக அறிவியல் பயிற்சிக் கூடம் (Isha Institute of Inner-Sciences) தொடங்கிவைக்கப் பட்டதோடு, அதில் பிரம்மாண்டமான 21 அடி உயரமுள்ள ஆதியோகி சிலையும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 8 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 30,000 ச.அடி கொண்ட இந்த இரண்டடுக்கு வளாகத்தில் யோகம், தியானம் ஆகியவற்றுக்கான விசேட இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆதியோகி சிலையின் முன்னிலையில் ஒரு தாமிர லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தை எவரும் தொட்டு அபிஷேகம் பூஜை செய்து அதனால் ஆன்மீக அதிர்வுகளைப் பெறமுடியும். இதனைப் பிராணப்பிரதிஷ்டை செய்கையில் சத்குரு கூறினார்: "மண்ணை உணவாக மாற்றுவது வேளாண்மை; உணவை எலும்பும் சதையுமாக மாற்றுவது செரிமானம்; எலும்பையும் சதையையும் மண்ணாக்குவது தகனம். ஆனால், சதையையோ, மண்ணையோ, வெட்டவெளியையோ தெய்வீகப்படுத்துவதுதான் பிராணப்பிரதிஷ்டை."

இந்த 1400 ஏக்கர் ஆச்ரமத்தில் முன்னரே 39,000 ச.அடி கொண்ட 'மஹிமா' தியான மண்டபம் உள்ளது. இது மேற்குலகில் முதன்மையானது ஆகும். ஆதியோகி சன்னிதானம் மனிதருக்குள்ளிருக்கும் பஞ்சபூதங்களைத் தூய்மைப்படும் 'பூதசுத்தி' என்கிற யோகவழியைக் கொண்டிருக்கிறது.

ஆதியோகி சன்னிதானம் ஆண்டின் எல்லா நாட்களும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். வாரயிறுதி நாட்களிலும், பௌர்ணமி அன்றும் மாலையில் விசேட ஆரத்தி நடைபெறும். வாழ்வில் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் உதவும் சடங்குகள் இங்கே நடத்த வசதி உண்டு. குழந்தைக்குப் பெயர்சூட்டல், திருமணம் போன்றவை இதில் அடங்கும். அன்பர்கள் பூமாலை, கற்பூரம், தீப எண்ணெய் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: tamilblog.ishafoundation.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com