ஃபிலடெல்ஃபியா: இளையோர் ஈகைப் பயிலரங்கம்
அக்டோபர் 3, 2015 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்ஃபியா கிளை, குழந்தைகள் மற்றும் இளையோருக்கான ஈகைப் பயிலரங்கம் ஒன்றை அமெரிக்க மண்ணில் முதன்முறையாக நடத்தியது. பெரியோர்கள் ஒய்.ஜி.மகேந்திராவின் நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது மூன்றுமுதல் 18 வயதுவரை உள்ள 60 இளையோர், பாரி முதல் பில்கேட்ஸ்வரை பல வள்ளல்களின் ஈகைப்பண்பைப் பற்றித் தெரிந்து கொண்டனர்.

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான், மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன், செத்தும் கொடுத்த சீதக்காதி, தற்கால முன்னோடி பில்கேட்ஸ் போன்றோர் பற்றிய செய்திகளைக் கொண்ட பயிலரங்க மலர் வந்திருந்தோருக்கு வழங்கப் பெற்று, கலந்துரையாடல் நடந்தது. அறக்கட்டளையின் திட்டங்களில் தமிழகத்தில் தன்னார்வப் பணிபுரிந்த, பார்த்து மற்றும் உதவிவரும் அருண், அபிராமி சின்னக்கருப்பன், சாந்தி பாஸ்கர், கார்த்திக் சுந்தர், இசைமாறன், வித்யா சுந்தர், கிருஷ்ணா சுரேஷ் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, இளையோரை தமிழகத்தில், தன்னார்வப் பணிபுரிய ஊக்கினர். தன் பிறந்தநாளுக்குப் பரிசுகள் வேண்டாம்; அறக்கட்டளையின் பணிகளுக்கு அதை நன்கொடையாகக் கொடுங்கள் என்று நிதி திரட்டிய அபிராமி சின்னக்கருப்பன், கோகுல் மற்றும் அபிராமி முருகதாஸ் ஆகியோரின் கொடைத்திறம் பாராட்டப்பெற்றது. பயிலரங்கத்தைப் பெற்றோரும், இளையோரும் பெரிதும் பாராட்டினர்.

சோமலெ சோமசுந்தரம்,
ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா

© TamilOnline.com