வெங்கட் சாமிநாதன்
விமர்சன பிதாமகரும், மூத்த தலைமுறை இலக்கியவாதியுமான வெங்கட் சாமிநாதன் (82) பெங்களூரில் காலமானார். படைப்பிலக்கியம், ஒவியம், இசை, நாடகம், திரைப்படம், நாட்டார்கலை எனப் பலதுறைகளில் ஆழ்ந்த அறிவும் ரசனையும் கொண்ட வெ.சா. எவருக்கும் அஞ்சாத எழுத்து நேர்மை கொண்டவர். அவரது விமர்சனக் கட்டுரைகள் மிகப்பலரை அறிமுகப்படுத்தியதுண்டு. கறாரான விமர்சனங்களால் சர்ச்சைகளுக்கு ஆளானவரும்கூட. இவரது திரைக்கதையில் உருவான 'அக்ரஹாரத்தில் கழுதை' திரைப்படம் தமிழ்த்திரையுலகின் முக்கியமான படங்களுள் ஒன்றாகும். அரசியல் சமரசத்துக்குச் சற்றும் உடன்படாத இவரைத் தமிழகம் அல்லது நடுவண் அரசின் விருதுகள் தேடி வரவில்லை. ஆயினும் உள்ளதை உள்ளபடிப் பேசிய இவரது நடுநிலை எழுத்துக்கெனவே ஒரு வாசகர் வட்டம் உருவாகியிருந்தது. 'பாலையும் வாழையும்', 'பான்ஸாய் மனிதன்', 'கலைவெளிப் பயணங்கள்', 'ஓர் எதிர்ப்புக்குரல்', 'சில இலக்கிய ஆளுமைகள்', 'உரையாடல்கள்', 'வாதங்களும் விவாதங்களும்' போன்றவை இவரது முக்கியமான நூல்களாகும். கனடாவின் டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் 2003ம் ஆண்டுக்கான இயல் விருதை இவருக்கு வழங்கியது.

தென்றல் இதழுக்கு இவர் அளித்த மிக விரிவான பேட்டியை வாசிக்க: (தென்றல், பிப்ரவரி 2010).

© TamilOnline.com