மினசோட்டா: தமிழ்க் கலை, பண்பாட்டுப் பட்டறை
ஆகஸ்ட் 29, 2015 அன்று மினசோட்டா மாநிலம் பெய்லர் பூங்காவில் 'தமிழ் கலை, பண்பாட்டுப் பட்டறை' காலையில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கியது. அரைமணி நேரம் இளையோருக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மூச்சுப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. அடுத்த ஒருமணி நேரம் சிலம்பப் பயிற்சி வழங்கப்பட்டது. ஒருமணி நேரத்திற்குத் தமிழிசைப் பயிற்சியாகப் பாரதியார் பாடல் கற்றுத்தரப்பட்டது.

அறுசுவை மதிய உணவுக்குப் பின், தெருக்கூத்தின் அடிப்படை 2 அடவுகள், ஓரிரு நடிப்பு நுணுக்கங்கள் ஆகியவற்றைப் பயின்றனர். முகப்பூச்சு ஒப்பனை பழகினர். பின்னர் கபடி, பட்டம் விடுதல், பம்பரம், கோலி ஆகியவை விளையாடி மகிழ்ந்தனர். பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் மற்றும் தாயக்கட்டை என்று விதவிதமான விளையாட்டுகளை ஆடினர். மாலையில் கொள்ளு, பச்சைப் பயறு சுண்டல் உண்டபின், பறை இசைத்து, ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். பங்கேற்புச் சான்றிதழ்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.

தமிழர் கலை, பண்பாட்டுப் பெருமையை இளையதலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் நோக்கோடு மினசோட்டா தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பள்ளி இளையோர் பண்பாட்டுப் பட்டறையை மூன்றாண்டுகளாக ஏற்பாடு செய்துவருகிறது. இதில் ஒன்பது வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பங்கேற்பர்.

சச்சிதானந்தன். வெ

© TamilOnline.com