அரங்கேற்றம்: கிஷன் ஸ்ரீகாந்த்
மெஸ்க்வைட் (டெக்சஸ்) கிருஷ்ண கான சுதா மியூசிக் அகாடமி குரு ராஜராஜேஸ்வரி பட் அவர்களின் மாணவன் கிஷன் ஸ்ரீகாந்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் மெஸ்க்வைட் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஸ்ரீகாந்த் நளினகாந்தி ராக வர்ணத்துடன் தொடங்கினார். வர்ணத்தைத் தொடர்ந்து 'ஸ்ரீ மஹாகணபதி' (கௌளை) கிருதியைப் பாடினார். தொடர்ந்தது தியாகராஜரின் ஆரபிராக 'சாதிஞ்சனே'. அடுத்து ஆலாபனையுடன் லதாங்கியில் 'அபராதுலா'வைத் தொடங்கி, பின்னர் ஸ்வரங்களை விறுவிறுப்பாகப் பாடினார். சுகமான காபிராகக் கிருதிக்குப் பின் 'சரவணபவ' என்ற பசுபதிப்ரியா ராகப் பாடலை பாடினார்.

கச்சேரியின் முக்கிய பாடலான தியாகராஜரின் 'ராமகதா சுதா' என்ற மத்யமாவதி ராகப் பாடலை விரிவான ஆலாபனை, ஸ்வரங்களுடன் ரசிகர்கள் முன்னே வைத்தார். ஹம்ஸாநந்தி ராகப் பாடலைத் தொடர்ந்து வந்தது ராகம், தானம், பல்லவி. இது பூர்விகல்யாணி, மோஹனம், கானடா, காபி, வலஜி, பேஹாக் ஆகிய ராகங்களில் அமைந்திருந்தது. அவரது தன்னம்பிக்கை மலைக்க வைத்தது. அடுத்து வந்த சிந்துபைரவிப் பாடல் சிறப்பு. முடிவில் மதுவந்தி ராகத் தில்லானவுடன் கச்சேரியை நிறைவு செய்தார்.

பக்கவாத்தியத்தில் விட்டல் ராமமூர்த்தி (வயலின்), திருவாரூர் வைத்தியநாதன் (மிருதங்கம்) ஆகியோர் சிறப்புறச் செய்தனர்.

மதுர் பாலசுப்ரமண்யம், சீதளாபதி பாலசுப்ரமணியன், நெய்வேலி சந்தானகோபாலன், சங்கீத கலாசார்யா செங்கல்பட்டு ரங்கநாதன் ஆகியோரிடம் குரு ராஜராஜேஸ்வரி பட் சங்கீதப் பயிற்சி பெற்றுள்ளார். சிறந்த பாடகரான இவர் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் (Houston) 'கிருஷ்ணகான சுதா மியூஸிக் அகாடமி'யை நிறுவியுள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள கர்நாடக இசை மாணவர்களுக்காக, ஒரு பட்டயப் படிப்பை இவர் உருவாக்கியுள்ளார். இசை ஆர்வலர்களுக்கு இவர் ஆண்டுதோறும் ஓர் இசைப்பட்டறையை குருகுல பாணியில் நடத்தி வருகிறார்.

தகவல்: முத்துசுவாமி கடயம் சங்கரா,
மெஸ்க்வைட், டெக்சஸ்
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com