டொரண்டோ: சங்க இலக்கியப் பயிலரங்கு
2015 ஆகஸ்ட் 8-9 தேதிகளில் சங்க இலக்கியப் பயிலரங்கு ஒன்றைத் தமிழ் இலக்கியத் தோட்டமும் தமிழ்ச் சங்கமும் இணைந்து மேற்கொண்டன. பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம் மற்றும் வைத்திய கலாநிதி லம்போதரன் ஆகியோரின் முன்னெடுப்பில் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளரான வைதேகி ஹெர்பர்ட் நடத்தினார். இப்பயிலரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டன,

தமிழனின் வாழ்க்கை முறை, உடை தயாரித்தல், ஆயுதம் தயாரித்தல், போரியல், தூதுவர் பணி, உடன்போக்கு, ஊடல், பிரிதல், உவத்தல், நிலங்களின் பாகுபாடுகள், மக்கள் வாழ்வியல், பெண்டிருக்கானதும் ஆடவருக்கானதுமான அணிகலன்கள், இயற்கை, ஐவகை நிலங்களின் மக்களின் தொழில் முறைகள் பற்றிய விளக்கங்களும் காதல் ஒழுக்கங்கள் பற்றியும், தோழியர், செவிலித்தாய், தாய், பாங்கன் போன்றோரின் அறிவுரைகள் பற்றிய தெளிவுகளும், தலைவன் தலைவி துயில் கொள்ளும் படுக்கை அறைகள் அவற்றின் அளவுகள், படுக்கை விரிப்புக்கள் பறவைகளின் மென்மையான சிறகுகளாலான பஞ்சணை போன்றனவும், கதவுகள், சாளரங்கள், மாடங்கள், ஏழு அடுக்குக் கட்டிடங்கள் என்பனபோன்ற விபரங்களைச் சங்கப் புலவோர் எடுத்துக் கையாண்டுள்ளமையின் கவித்திறனையும் வியப்போடு எடுத்துரைத்தார்.

அகல் விளக்கு, பாவை விளக்கு என்பன யவனத்திலிருந்து வருவிக்கப்பட்டவை என்பதனைச் சங்க இலக்கியவாயிலாக அறியமுடிகிறது. பல்வேறு சங்கத் தமிழ்ச் சொற்களுக்கான பொருள்களை விரித்துரைத்தார். ஒன்றைக் கூறி இன்னொன்றைப் பொருள்கொள்ளும் உள்ளுறை உவமம் சங்க இலக்கியத்தின் சிறப்பு என்றார். தமிழ்ப் பேராசிரியரான ஜார்ஜ் ஹார்ட் அவர்களே தன்னைச் சங்க இலக்கியத்தைப் படிக்கத் தூண்டியவர் என்றும் குறிப்பிட்டார். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்களின் நன்றியுரையுடன் பயிலரங்கு நிறைவுற்றது.

த.சிவபாலு,
டொராண்டோ, கனடா

© TamilOnline.com