Tuesdays with Morrie
தினமும் அலுவலகத்துக்குச் செல்லும் நெடுநேரப் பயணத்தில் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை வருகின்றன. அச்சுப் புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம் பெறமுடிகிறது. எல்லாம்வல்ல பகவதி அருளால் பெரும்பாலும் நல்ல புத்தகங்களாகவே எனக்கு அமையும். சமீபத்தில் அப்படி நான் கேட்ட ஆங்கிலப் புத்தகம் 'Tuesdays with Morrie'.

இது மோரி ஷ்வார்ட்ஸ் (Morrie Schwartz) என்னும் அமெரிக்க சமூகவியல் பேராசிரியர் பற்றிய நினைவுக்குறிப்பு ஆகும். எழுதியவர் அவரது மாணவர் மிட்ச் அல்போம் (Mitch Albom). தன் வாழ்வின் மிகப்பெரிய பாடங்களாக இறக்கும் தறுவாயிலுள்ள பேரா. மோரி சொல்வதாக இந்தப் புத்தகம் அமைகிறது. அதன் சுருக்கம் இதோ:

பேரா. மோரி ALS எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு சாகக்கிடக்கிறார். மருத்துவர்கள் அவருக்குச் சில மாதங்கள் என நாள் குறிக்கிறார்கள். அந்தத் தருணத்தில் முன்னாள் மாணவர் மிட்ச் ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சந்திக்கிறார். அதுவரை எந்தத் தொடர்புமற்ற நிலையில் மோரி மாணவரின் பெயரைச் சொல்லி அழைக்கிறார்! அதன் தொடர்ச்சியாக அவரிடம் நீண்டகால நண்பர்போலப் பேராசிரியர் உரையாடுகிறார். இங்குதான் கதை தொடங்குகிறது.

பேராசிரியரின் அன்பால் ஈர்க்கப்பட்ட மாணவர் மிட்ச் பல நூறு மைல் தாண்டி ஓவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அவரைச் சென்று சந்திக்கிறார். அதுவே 'Tuesdays with Morrie’. சந்திப்பின்போது மனிதநேயம், அன்பு, திருமணம், குடும்பம், நட்பு, கலாசாரம், மரணம் என வாழ்வின் பல கூறுகளை அவர்கள் விவாதிக்கிறார்கள். கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபவங்கள், சிந்தனைகள் எனப் பலவற்றை தொட்டுச் செல்கிறார்கள். இளைய தலைமுறை எதிர்கொள்ளும் எல்லாச் சமகாலக் குழப்பங்களுக்கும் அந்த உரையாடல்கள் விடைதருகின்றன.

"அன்பே பூரணம், அதுவே வாழ்வில் நிரந்தரம்" என அவர் அழுத்திச் சொல்கிறார். அந்தச் சந்திப்புகள் தனது வாழ்வில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தியதை மிட்ச் உணர்கிறார். பேராசிரியர் இறக்கும்வரை மொத்தமாகப் பதினான்கு செவ்வாய்களில் சந்திப்புகள் தொடர்கின்றன. இந்த புத்தகத்தின் சாரம் எளிதானது அதே சமயம் ஆழமானது. இயந்திரத்தனமான உலகில் நம்மைப்போல வாழும் எல்லோரும் எளிதாகப் பொருத்திப் பார்க்கக்கூடியதே. புத்தகத்தில் என்னைக் கவர்ந்த சில மேற்கோள்கள்.

* அன்பு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.
* அன்பு செலுத்து அல்லது அழிந்து போ.
* மரணம் ஒரு வாழ்க்கையை மட்டுமே முடிக்கிறது, ஓர் உறவை அல்ல.
* நீங்கள் இறக்குமுன் உங்களை மன்னியுங்கள். பின்னர் மற்றவர்களை மன்னிக்கவும்.
* நீங்கள் இறந்த பிறகும்கூட அன்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதே சமயத்தில் ஓரு பேராசிரியருக்கும் மாணவருக்குமான உறவைத் தாண்டி இரு தலைமுறைகள் இடையிலான உறவை இந்தப் புத்தகம் நெகிழ்ச்சியாக விவரிக்கிறது. வாழ்ந்த தலைமுறை வாழும் தலைமுறைக்கு விட்டுச்செல்லும் மிகப்பெரிய பாடம் அனுபவங்களன்றி வேறென்ன இருக்க முடியும்!

இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது. பல பள்ளிகள், கல்லூரிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. 'Tuesdays with Morrie' என்னும் அதே பெயரில் திரைப்படமாக வெளியாகியுள்ளது.

படத்தைப் பார்க்க:


பேரா. மோரியின் பேட்டி:


கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.
(நூல்: Tuesdays with Morrie; ISBN: 0-385-48451-8; வெளியீட்டாளர்: Doubleday)

ஆரூர் பாஸ்கர்,
ஃப்ளோரிடா

© TamilOnline.com