டாக்டர். சுந்தரவேலும் திருமூலர் பிராணாயாமமும்
டாக்டர். சுந்தரவேல் பாலசுப்பிரமணியன். மெடிக்கல் யுனிவர்சிடி ஆஃப் சவுத் கரோலினாவில் ஆராய்ச்சித் துணைப்பேராசிரியர். அவர் ஒரு செல் பயாலஜிஸ்ட்கூட. "திருமூலர் அருளிய திருமந்திரத்தில் கூறியபடி பிராணாயாமம் செய்தால் வாயில் உமிழ்நீர் அதிகம் சுரப்பதை நான் கவனித்தேன். அதிலிருந்து உடல்நலத்துக்கான அரிய விஷயமொன்றைக் கண்டுபிடித்தேன்" என்கிறார் இவர் தனது அசத்தலான TEDx உரையில்

உமிழ்நீரில் நரம்புவளர்ச்சிக் காரணி (Nerve Growth Factor - NGF) காணப்படுகிறது. நமது நரம்பு மண்டலத்தின் பாதுகாப்புக்கு இது மிகவும் அவசியம். ஏதாவது காரணத்தால் NGF குறைந்தால் அல்ஷைமர்ஸ் நோய், உடலில் மிகுந்த வலி (hyperalgesia) போன்றவை ஏற்படலாம். நிவாரணத்துக்காகச் சிலசமயம் நோயாளிகளின் மூளைக்குள் இதை ஊசிவழியாகச் செலுத்துவதும் உண்டு. சர்க்கரை நோய் போன்றவை கொண்டவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பது குறைவதால் நாவறட்சி ஏற்படுவதைப் பார்க்கலாம். உமிழ்நீர் நமது ஜீரணம், நோய்த்தடுப்பு மற்றும் சுவாச அமைப்புகள் சரிவர இயங்கவும் மிக அவசியம்.



சரி, சுந்தரவேல் என்ன கண்டுபிடித்தார்? "பிராணாயாமம் செய்வதால் இரண்டு வகை நன்மைகள் ஏற்படுவதை நான் கண்டுபிடித்தேன். ஒன்று, பிராணாயாமம் செய்யும்போது வழக்கத்தைவிட அதிகமாக உமிழ்நீர் சுரக்கிறது என்பதை. இரண்டாவது, அப்போது சுரக்கும் உமிழ்நீரில் நரம்புவளர்ச்சிக் காரணி வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்படுகிறது என்பதை" என்கிறார் சுந்தரவேல். முறையாக இதை ஆய்வுமூலம் நிரூபித்து, அறிவியல் சஞ்சிகைகளிலும் கட்டுரையாகப் பதிவுசெய்துள்ளார்.

பத்துப் பத்துபேர் கொண்ட இரண்டு குழுக்களில் தனது ஆராய்ச்சியை நடத்தினார். ஒரு குழுவினர் தங்களுக்கு விருப்பமான அறிவியல் நூல்களை 20 நிமிடம் படித்தனர். மற்றொரு குழுவினர் முதல் 10 நிமிடம் ஓங்காரம் ஜபித்தனர், அடுத்த 10 நிமிடம் திருமூலரின் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள பிராணாயாமப் பயிற்சி செய்தனர். ஆய்வின் தொடக்கம், நடு மற்றும் முடிவில் இரு குழுவினரின் உமிழ்நீரையும் சேகரித்துப் பரிசோதித்ததில் பிராணயாமம் செய்த குழுவினருக்கு உமிழ்நீரின் அளவு அதிகம் சுரந்திருப்பதையும், அதில் NGF அளவு அதிகம் இருப்பதையும் காணமுடிந்தது. "இதன்மூலம் அல்ஷைமர், அதிகவலி நோயாளிகளுக்கு நல்ல நிவாரணத்துக்கான எளிய வழி ஒன்று கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதைவிட முக்கியம் என்னவென்றால், நோயற்றவர்களும் பிராணாயாமம் செய்வதன்மூலம், உடல்நலத்தோடும், இளமையோடும், மன அமைதியோடும் இருக்கமுடியும் என்பதுதான்." என்கிறார்.

சுந்தரவேல் தகுதிபெற்ற யோக ஆசானுங்கூட. கரம்பக்குடியைச் சேர்ந்த இவரது முன்னோர் சித்த மருத்துவர்கள். இளவயதிலேயே யோகாசனம், பிராணாயாமம், தியானம் போன்றவற்றை இவர் கற்றுள்ளார். உலக அளவில் யோக தினம் அனுசரிக்கப்பட்ட இந்தச் சமயத்தில், அறிவியல் பூர்வமாக யோகப் பயிற்சிகளின் நற்பயன்களை நிரூபிப்பதும், அவற்றை உலகுக்கு எடுத்துக்கூறுவதும் இந்திய யோகிகள் நமக்குத் தந்துசென்ற பாரம்பரிய ஆன்மீக ஞானத்துக்கு நாம் செய்யும் கைமாறாகும். இந்தத் திசையில் டாக்டர். சுந்தரவேல் பாலசுப்பிரமணியனின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.

என்ன, பிராணாயாமம் செய்யக் கிளம்பிவிட்டீர்களா?

தொகுப்பு: மீனாட்சி கணபதி

© TamilOnline.com