காலத்தைப் போற்றிடுவோம்!
காலத்தைப் போற்றுதற்குக் காரணங்கள் பலவுண்டு!
ஞாலத்தில் மாந்தர்தம் துயரத்தைப் போக்குதற்குக்
காலத்தைப் போன்றதோர் அருமருந்து வேறுண்டோ?
காலத்தைப் போற்றிடுவோம்! கண்ணெனவே மதித்திடுவோம்!

காலத்தின் ஓட்டத்தில் பிணியென்றும் மூப்பென்றும்
காலனவன் கைப்பட்டு மடிகின்ற மாந்தரிடை
காலத்தைத் தாம்வென்று இன்றளவும் வாழ்கின்றார்
ஞாலத்தில் சிலரென்றால் விந்தையிலும் விந்தையன்றோ!

மாந்தரவர் மனதிற்குப் பாங்கான சூழலெனில்
பாந்தமாய்க் காலமது பறந்தோடிச் செல்கிறது!
ஒவ்வாத சூழலிலே நாளொன்று போவதெனில்
எவ்வளவு போராட்டம்! காலத்தின் தேரோட்டம்!

நன்மைகள் நடந்திட்டால் காலத்தை நல்லதென்பார்
துன்பங்கள் தொடர்ந்திட்டால் அதனையே தீயதென்பார்
காலத்தைக் கணக்கிட்டுக் கவனமுடன் வாழ்ந்திடுவோம்
காலத்தைப் போற்றிடுவோம்! கண்ணெனவே காத்திடுவோம்!

வி. அனுசூயா

© TamilOnline.com