அரங்கேற்றம்: சித்ரா லட்சுமணன்
ஜூன் 27, 2015 அன்று நோவை மிடில்ஸ்கூல் கலையரங்கில் செல்வி. சித்ரா லட்சுமணன் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. குரு கலைமாமணி ஸ்ரீகலா பரத் (சென்னை) நடத்திவரும் "தேஜஸ்" நடனப்பள்ளியின் மாணவி இவர். வழுவூர் பாணியில் பரதம் பயின்றுவரும் இவர் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார். சைவசித்தாந்தப் பரம்பரையில் வந்த இவர், பிரணவம் தத்துவத்தைக் கருத்தாகக்கொண்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்திருந்தார். வழுவூர் ராமையா பிள்ளை இயற்றிய சொக்கநாதர் கவுத்துவத்துக்கு அழகான பாவங்கள் பிடித்து அரங்கில் உள்ளோரை லயிக்கச் செய்தார். சாவேரி ராக ஜதிஸ்வரம் அவையோரைத் தாளம்போட வைத்தது. கடிகை நமச்சிவாயப் புலவர் இயற்றிய கமாஸ் ராக ஸ்வரஜதிக்கு சித்ராவின் பாதவேலையும் முகபாவங்களும் சிறப்பாக இருந்தன. சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "மதுர மதுர மீனாட்சி" என்ற பாகேஸ்வரி ராகக் கிருதியில் மீனாட்சியம்மனைக் கண்முன் கொணர்ந்தார். ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் "விஷமக்காரக் கண்ணா", சுவாதித்திருநாள் இயற்றிய ஜாவளி, கடம் கார்த்திக் இயற்றிய தில்லானா, புரந்தரதாசரின் "பாக்யாத லக்ஷ்மி பாரம்மா" ஆகியவற்றுக்கும் சித்ராவின் நடனம் வெகுநேர்த்தி.

கலைமாமணி ஸ்ரீகலா பரத் கணினித் தொழில்நுட்பம் மூலம், மிச்சிகனில் வாழ்ந்துவரும் சித்ராவுக்கு நடனம் பயில்வித்தார். சித்ரா ஸ்ரீகலாவின் முதல் NRI மாணவி. பக்கம் வாசித்த திரு. எம். தனஞ்செயன் (மிருதங்கம்), திரு. ஜெய்சங்கர் பாலன் (வயலின்), திரு. கோபி சுந்தரம் (புல்லாங்குழல்), திருமதி. பவானி எஸ். கிஷோர் குமார் (வாய்ப்பாட்டு) ஆகியோர் நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தனர்.

நோவை உயர்நிலைப்பள்ளியில் Summa Gum Laude பிரிவில் தேர்ச்சியுற்ற சித்ரா, மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிடியில் கல்லூரிப் படிப்பைத் தொடரவிருக்கிறார். இவர் கர்நாடக சங்கீதம், சித்ரவீணை ஆகியவற்றிலும் தேர்ந்தவர்.

காந்தி சுந்தர்,
நோவை, மிச்சிகன்

© TamilOnline.com