அரங்கேற்றம்: அனன்யா சுந்தர்ராகவன்
ஜூலை 11, 2015 அன்று டூலுத்தில் உள்ள குவின்னெட் பெர்ஃஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில் நிருத்ய சங்கல்பாவின் மாணவி அனன்யா சுந்தர்ராகவனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மஞ்சுளா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். வைஷ்ணவ மார்க்கத்தைக் கருப்பொருளாகக் கொண்டிருந்த நிகழ்ச்சியில் முதலாவதாக வந்தது ஆண்டாள் கவுத்துவம். இதில் உலகளந்த பெருமாள்மீது காதலால் கசிந்துருகிய அனன்யா, அடுத்துவந்த ஜதிஸ்வரத்தில் நேர்த்தியான அபிநயம், முனைப்பான பாதவரிசை இவற்றால் காண்போரை இருக்கையில் கட்டிப்போட்டாள். நாட்டகுறிஞ்சி ராகத்தில், ரூபக தாளத்தில் வந்த "மா மோகம் தானே மீறுதே" என்ற பாடலில் ஏழுமலையானை வர்ணித்து, தன்னைக் கடைக்கணியாமையால் ஏங்கி, தன் ஆற்றாமையைத் தோழியிடம் கூறும் நாயகியைக் கண்முன் காட்டி, ஒரு நாட்டிய நாடகம் நடத்தினாள்.

இடைவேளைக்குப் பிறகு "நீ இரங்காயெனில் புகல் ஏது?" என்று மகாலக்ஷ்மியை வேண்டி, பின்வந்த "ஜகன் மோகனனே" என்னும் கிருஷ்ண கீர்த்தனையிலும், "பஜமன ராம சுகதாயி" என்னும் ராம பஜனிலும், நல்ல அபிநயத்துடன் கூடிய நடன அமைப்பு அருமை. சரஸ்வதியின் புகழ்பாடும் தில்லானாவுடன் அரங்கேற்றம் நிறைவடைந்தது.

திருமதி. ஜோதிஸ்மதி ஷீஜித் கிருஷ்ணா (வாய்ப்பாட்டு), திரு. சுப்ரமணியன் விஸ்வநாதன் (மிருதங்கம்), திரு. G.S. ராஜன் (புல்லாங்குழல்), திருமதி. கல்பனா பிரசாத் (வயலின்), திருமதி. சவிதா (நட்டுவாங்கம்) ஆகியோரும் நிகழ்ச்சிக்குப் பொலிவூட்டினர். இருபது வருடங்களாக அட்லாண்டாவில் நாட்டியம் பயிற்றுவித்து வரும் குரு சவிதா விஸ்வநாதனிடம், ஐந்து வயதுமுதல் நாட்டியம் கற்றுவரும் அனன்யா, கிளாரினெட் வாசிப்பதிலும், வாய்ப்பாட்டிலும் திறமைவாய்ந்தவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டிய பொருளை சங்கர நேத்ராலயா (www.omtrust.org) கண்சிகிச்சை மையத்திற்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com