ஆண்டுவிழா: சன்ஸ்கிருதி நாட்டியப்பள்ளி
மே 10, 2015 அன்று நியூ ஜெர்சி சன்ஸ்கிருதி நாட்டியப்பள்ளியின் பத்தாவது ஆண்டுவிழா நார்த் பிரன்ஸ்விக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதையொட்டி குரு சித்ரா ராமஸ்வாமி, 'துருவா' என்னும் நாட்டியநாடகத்தை வடிவமைத்து அரங்கேற்றினார். பஞ்சதந்திரம் மற்றும் மகாபாரத கதாபாத்திரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்நாடகத்தில், பள்ளியின் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

காட்டு ராஜாவான சிங்கத்தை அதன் சகோதரன் கொன்றுவிட, இளவரசன் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கி, நாட்டை மீட்பதுதான் கதைக்கரு.ஆரம்பமுதல் மாணவர்கள் நடனத்தின்மூலம் காட்டு விலங்குகள் உட்பட்ட பாத்திரங்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினர். காட்சிகளுக்கேற்ப இசையும், ஒளியமைப்பும் அமைந்திருந்தன.

துருவ நட்சத்திரம் எப்படி வழிகாட்டுமோ அதேபோல, நேர்மை, நாணயம் ஆகியவை தீமையை எளிதில் வெல்ல உதவும் என்பது வலியுறுத்தப்பட்டது. சிங்கராஜாவாக சித்ரா ராமஸ்வாமியும், இளவரசனாக ஷிவானி கார்த்திகேயனும் வேடமேற்றனர். வில்லனாக வந்த மதுசேனா கார்த்திகேயனும் மிக நேர்த்தியாக நடனமாடினார். பரதநாட்டியத்தை, வித்தியாசமாக, அதேசமயம் தூய்மை கெடாமல் கொடுக்கமுடியும் என்பதை நிருபித்தார் சித்ரா ராமஸ்வாமி.

ஆங்கிலத்தில்: ரங்கஸ்ரீ ராம்ஜி,
எடிசன், நியூ ஜெர்சி
தமிழாக்கம்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com