நாட்யா: 'பாலகாண்டம்'
மே 23, 2015 அன்று, லெமாண்ட் இந்துக்கோவில் அரங்கத்தில், குரு ஹேமா ராஜகோபாலனின் 'நாட்யா டான்ஸ் தியேட்டர்', சிகாகோ தியாகராஜ ஆராதனையை முன்னிட்டு 'பாலகாண்டம்' நாட்டிய நிகழ்ச்சியை வழங்கியது. தியாகராஜர் ஸ்ரீராமர்மேல் பல கீர்த்தனைகளை எழுதியிருந்தாலும் அருணாசலக் கவிராயரைப் போல ராமாயணத்தை எழுதவில்லை. இந்த நாட்டிய நாடகத்தில் தியாகராஜரின் கீர்த்தனைகள் வழியாகவே ராமாயணக் கதையை ஹேமா அழகுற விவரித்துள்ளார்.

விஜயஸ்ரீ ராகத்திலமைந்த 'வரநாரத நாராயண' என்ற க்ருதியின்மூலம் லவ-குசர்களை சூத்திரதாரர்களாக அறிமுகப்படுத்துகிறார். "ஸ்ரீ கணபதினி" என்ற சௌராஷ்டிர ராகக் க்ருதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோசலையின் தாய்ப்பாசத்தை விளக்கும் 'ராமாபி ராமா' என்ற தர்பார் ராகப் பாடல். அடுத்து, சகோதரர்கள் நால்வரும் வசிஷ்டரிடம், வேதம், வில்வித்தை பயில்வதைச் சித்தரிக்கும் நடனம்.

ராம, லஷ்மணர்களை விசுவாமித்தரருடன் கானகத்திற்கு அனுப்பும் தசரதனின் வேதனையை 'நன்னு விடச்சி கடலகுர' (ரீதிகௌளை) கீர்த்தனையில் சித்தரித்தனர். தாடகவதத்தில் விறுவிறுப்பான ஜதிகள் இடம்பெற்றன. அபூர்வமான க்ருதிகளான 'வசமகொசாரமே' (கைகவாசி), 'குருலேகா எடுவண்டி' (கௌரிமனோஹரி) ராமருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையே இருந்த குரு-சிஷ்யன் உறவைச் சித்தரித்தன. இந்திரனைக் கண்ட அகல்யையின் மனசஞ்சலம், கௌதமமுனி சபித்ததும் அகல்யை துன்புறுதல், ஸ்ரீராமரின் பாதம்பட்டு சாபவிமோசனம் என யாவற்றுக்கும் மிகப் பொருத்தமான பாடல்களைக் கொண்டு காட்சிகள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. மிதிலைக் காட்சி, சீதை சுயம்வரம், ஸ்ரீராமர் கல்யாணம் என்று மங்களமாக நிகழ்ச்சி கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக அமைந்தது.

ஹேமா ராஜகோபாலனின் நடன அமைப்பு சிறப்பாக அமைந்திருந்தது. நடனக்கலைஞர்களை அவர் நேர்த்தியாகப் பயிற்றுவித்திருந்தார். உடைகள் எளிமையாகவும், நளினமாகவும் இருந்தன. ஒரு புத்துணர்வு தரும் அனுபவமாக இருந்தது 'பாலகாண்டம்'.

ஷோபா நடராஜன்,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com