ஆண்டுவிழா: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
ஜூன் 7, 2015 அன்று டேரியன் இன்சுடேல் தெற்கு உயர்நிலைப்பள்ளி அரங்கில் ஒருங்கிணைந்த அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் எட்டாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. காலை 11:00 மணிக்கு சிகாகோ புறநகரத்தின் ஏழு தமிழ்ப்பள்ளிகள் மற்றும் மில்வாக்கி (விஸ்கான்சின்), மன்ஸ்டர் (இந்தியானா) பள்ளிகளின் மாணாக்கர்கள், பெற்றோர்கள் 600க்கும் மேற்பட்டோர் குழுமினர்.

திருக்குறள், ஆத்திசூடி, தமிழ்த்தாய் வாழ்த்துக்களோடு நிகழ்ச்சி தொடங்கியது. 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் வீழ்ந்த தமிழர்களுக்கு நினைவஞ்சலியாக 2 நிமிடம் அமைதி காக்கப்பட்டது. பின்னர் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். 'வள்ளுவரின் ஈகை' குறித்த சிறு நாடகம் சுவையாக இருந்தது. 'தமிழ் வளர்த்த அறிஞர்', பாரதியின் பாடல்கள் தொடர்ந்தன. வில்லுப்பாட்டு நிகழ்வைக் கெர்ணி தமிழ்ப்பள்ளியினர் வழங்கினர். 'முல்லைக்காட்டு நண்பர்கள்' தமிழர்களின் ஐவகை நிலப்பாகுபாட்டையும், தமிழர் வாழ்வையும், சுட்டிக்காட்டியது.

'குழப்பப் பொங்கல்' நாடகம் மகிழ்வூட்டியது. "செம்மொழி தமிழ்மொழி" பாடலை ஷாம்பர்க் தமிழ்ப்பள்ளி வழங்கிற்று. அனைத்துப்பள்ளி மாணவ, மாணவியரின் திருக்குறள் போட்டியில் 14 வயது செல்வன். நித்தின் சுப்பிரமணி (871 குறள்கள்), 10 வயது செல்வன். ரோஹித் (750), 10 வயதுக்குட்பட்ட முதல் பரிசுபெற்ற செல்வன். மகரந்த் (350) ஆகியோர் தமிழ்ப்பள்ளிகள் வழங்கிய ஒரு குறளுக்கு ஒரு டாலர் என்ற வீதத்தில் பரிசுகள் பெற்றனர். நடிப்பில் சொல்கண்டு எழுதும் திறன்; கொடுக்கப்பட்ட எழுத்தை அதிக அளவில்கொண்ட சொல், சொற்றொடர்களாக மாற்றும் திறன்; அந்தாதி போன்ற போட்டிகளும் சிறப்பாக இருந்தன.

தன்னார்வத் தொண்டாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றிக் காணிக்கை அளித்தது அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள். தமிழறிஞர்கள், இந்திய சுதந்திரப் போராட்ட தமிழ்ப் போராளிகள் (வேலு நாச்சியார்) ஆகியோரின் நிழற்படங்கள் குறிப்புக்களுடன் கண்காட்சியில் வைக்கப் பெற்றிருந்தது. நிகழ்ச்சியின் இடையிடையே அவர்பற்றிய வினாக்கள் அவையினரைச் சிந்திக்க வைத்தன. நன்றி நவிலலுக்குப் பின் விழா நிறைவெய்தியது.

வ.ச. பாபு,
டேரியன், இல்லினாய்ஸ்

© TamilOnline.com