சாகித்ய அகாதமி: பால புரஸ்கார், யுவ புரஸ்கார்
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமியின் பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பால புரஸ்கார் விருதுக்காக கவிஞர் செல்லகணபதியின் 'தேடல் வேட்டை' என்னும் சிறுவர் பாடல் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விருது 50,000 ரூபாய் பரிசும், தாமிர பட்டயமும் கொண்டது. செல்லகணபதி குழந்தை இலக்கியத்திற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நிறையச் சிறாருக்கான பாடல்கள், கதைகள் எழுதியதோடு குழந்தை இலக்கியம்பற்றி ஆராய்ந்து பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

யுவபுரஸ்கார் விருதுக்காக வீரபாண்டியன் எழுதிய 'பருக்கை' நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நல்ல உணவுக்குக்கூட வழியில்லாமல் பகுதிநேரம் கேட்டரிங்கில் பரிமாறுபவர் வேலைபார்க்கும் மாணவர்களின் வலியை இந்த நாவல் விவரிக்கிறது. அரசுவிடுதிகளின் அவலநிலை, கிராமப்புறத்திலிருந்து நகரங்களுக்குப் படிக்கவரும் ஏழை மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சக மாணவர்களுடனான பிரச்சனைகள், சமூகத்தின் போக்கு என எல்லாவற்றையும் இதில் அவர் பதிந்துள்ளார். வீரபாண்டியன், சென்னை பல்கலைக்கழகத்தின் முனைவர்பட்ட ஆய்வு மாணவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். "நாவலின், கரு சமூக அக்கறையோடு இருந்தால் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்பது, சாகித்ய அகாடமி விருது மூலம் உறுதி செய்துள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.



© TamilOnline.com