கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல்விருது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல்விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் ஜூன் 13ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான திரு. டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்துகொண்டார். இதில் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல்விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத்தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் ஜெயமோகன் நாவல், சிறுகதை, கட்டுரை விமர்சனம், நாடகம், சினிமா எனப் பலதளங்களில் இயங்கிவருபவர்.

தன்னைத் தீவிரமாகப் பாதித்த தனது பெற்றோரின் மரணங்களில் தொடங்கி, 'வாழ்க்கையை ஒரு கணமேனும் வீணாக்காது வாழ்வது எப்படி?' என்ற கருத்தை விரித்துரைத்தார். கடுமையான மனக்கொந்தளிப்புக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்கிறார். அற்புதமான சூரியஒளி பரவுகிறது. புதர்களில் ஒரு புழுவைக் காண்கிறார். ஒளி ஊடுருவும் உடல்கொண்ட புழு அது. அந்தத் தருணம் அதன் முழுவுடலே ஒளியாக அதன் உச்சத்தை அறிகிறார். "உச்சகட்ட நெருக்கடியில் இயற்கை புன்னகைக்கும்" என்றுணர்ந்து "இனி ஒருபோதும் வாழ்வில் சோர்வடைவதில்லை. ஒரு கணத்தையேனும் வீணாக்குவதில்லை" என்று அந்தநிமிடம் முடிவெடுக்கிறார். இன்றுவரை பயணமும் எழுதுவதுமாக என் வாழ்க்கையைச் சோர்வின்றி வாழ்கிறேன் என்று குறிப்பிட்டார்.

1981ல் உயர்கல்வியைப் பாதியில் நிறுத்தி இரண்டு வருடங்கள் துறவியாக அலைந்ததைக் கூறினார். காசியில் இருந்து டேராடூன் செல்லும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாத்ரீகர்கள் பத்துப்பேர் ஏறுகிறார்கள். ஏறினகணம் தொடக்கம் கிருஷ்ணனைப் பாடுகிறார்கள். ரிஷிகேஷ் சென்றடையும்வரை பாடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தம்மை ராதைகளாக உணர்கிறார்கள் என்பது புரிகிறது. எப்போதும் ஆடலும் பாடலும் கொண்டாட்டமுமாக இருக்கிறது அவர்கள் வாழ்க்கை. "தங்கத் தட்டில்தானே கிருஷ்ணமதுரம் வைக்கமுடியும்" என்று அவர்கள் சொல்வது இவரிடம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியதாம். அன்றிலிருந்து சோர்வில்லாத, துக்கமில்லாத வாழ்க்கையை வாழுகிறேன் என்றார்.

அன்று வழங்கப்பட்ட பிற விருதுகள்:
புனைவு இலக்கியப் பிரிவு - தேவகாந்தன், "கனவுச்சிறை"; குணா கவியழகன், "நஞ்சுண்டகாடு"
அபுனைவு இலக்கியப் பிரிவு - முத்தையா நித்தியானந்தன், 'கூலித்தமிழ்"; ஜெயராணி, "ஜாதியற்றவளின் குரல்"
சிறந்த கவிதைத் தொகுப்பு - கதிர்பாரதி, "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்"
மொழிபெயர்ப்புப் பிரிவு - கே.வி. சைலஜா, "யாருக்கும் வேண்டாத கண்" (மலையாளத்திலிருந்து தமிழ்); சுவர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளை, "Madras Studios - Narrative Genre and Ideology in Tamil Cinema"
மாணவர் கட்டுரைப் போட்டி - வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன்.
சுந்தர ராமசாமி கணிமை விருது - முத்தையா அண்ணாமலை.

விழாவுக்குப் பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்தனர். திருமதி. உஷா மதிவாணன் நன்றியுரை வழங்கினார். தென்றல் நிதியாதரவு தரும் அமைப்புகளில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிச்சந்திரிகா

© TamilOnline.com