ரோஹிணி வெங்கட்ராமன் நடன அரங்கேற்றம்
அக்டோபர் 1, 2005 அன்று ரெட்வுட் சிடி, கன்யாடா கல்லூரி, மெயின் ஸ்டேஜ் அரங்கில் ரோஹிணி வெங்கட்ராமனின் நடன அரங்கேற்றம் நடந்தேறியது.

மல்லாரியுடன் நிகழ்ச்சி ஆரம்பம். கோவில்களில் சுவாமி புறப்பாட்டின்போது கேட்கும் இசையை நினைவுபடுத்தியது. தொடர்ந்து 'கஜவதனா' பாடலில் விநாயகரின் அருளை வேண்டிப் பிரார்த்தித்தது அபிநயத்தில் அருமையாக இருந்தது. ஜதிஸ்வரத்தில் நாட்டிய அசைவுகள், தாளக்கட்டு யாவும் ஜோர்.

அடுத்து அபிராமி அந்தாதியின் இரு பாடல்கள். 'கண்களிக்கும்' எனத் தொடங்கி 'பண் களிக்கும் குரல் வீணையும் கையும்' என்று பாடும்போது ஏற்பட்ட உருக்கமும், காண்பித்த பாவமும் அபிராமி அன்னை சரஸ்வதி வடிவில் வந்து நின்ற காட்சியைக் கண்ணால் கண்டு மனதால் உணர முடிந்தது. வர்ணத்தில் ஜதி சொல்கட்டும் தீர்மானங்களும் விறுவிறுப்பாய் இருந்தன.

'மாசில் அயோத்திய மன்னன்' என்ற ராகமாலிகைப் பாடலில் ராமன் பிறப்பு, சீதா கல்யாணம், வனவாசம், ராவணவதம், பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மாற்றி மாற்றி பாவங்களைக் கண்களினால் சித்தரித்த விதம் மிக்க சிறப்பு.

'ஆனந்த நடனமாடும்' எனும் பாடலில் தில்லை நடராஜனையும் அன்னை சிவகாமியும் மேடைக்கே வந்ததுபோல் ஆடியவிதம் மனதிற்கு மிக்க ரம்யம்.

ஜயதேவர் அஷ்டபதியில் ராதை கண்ணனைப் பிரிந்து வாடுவதைத் தோழியிடம் சொல் வதை தத்ரூபமாகப் படம்பிடித்துவிட்டார். தில்லானாவுடன் நிறைவான முடிவு. குரு இந்துமதி கணேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஆஷா ரமேஷ் அவர்களின் இனிமையான இசை, இந்துமதி அவர்களின் நட்டுவாங்கம், சாந்தி நாராயணன் தம்பதிகளின் வயலின், மிருதங்க இசை நிகழ்ச்சிக்குக் கூடுதல் சிறப்புச் சேர்த்தன.

சீதா துரைராஜ்

© TamilOnline.com