தெரியுமா?: கீதா மதிவாணன்
திருச்சி பொன்மலையைச் சேர்ந்த கீதா மதிவாணன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவரது வலைப்பக்கம் 'கீதமஞ்சரி'. கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல் விமர்சனம் என்று நிறைய எழுதுகிறார். கறுப்பு அன்னம் பற்றிய இவரது கட்டுரை சுவாரஸ்யம். இதே வலைப்பதிவில் 'ஒண்டவந்த பிடாரிகள்' ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் அவலவாழ்வைச் சொல்கிறது. சங்க இலக்கியத்துள் ஒன்றான நெடுநல்வாடையை எளிய தமிழில் புதுக்கவிதையாக்கிக் கொடுத்திருக்கிறார். 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற தலைப்பில் 32 அத்தியாயங்களில் நெடுங்கதை ஒன்றை எழுதியிருக்கிறார்.

ஹென்றி லாஸன் எழுதிய ஆஸ்திரேலிய காட்டுவாசிப் பழங்குடிகளின் சிறுகதைகளைத் தமிழில் 'என்றாவது ஒருநாள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இவரது கதை, கவிதை, கட்டுரைகள் பல இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன இணைய வானொலியிலும் பங்காற்றி வருகிறார். அந்நாட்டின் விலங்குகள், பறவைகள், மரங்கள் என இயற்கை குறித்தும், சங்க இலக்கியம், மொழிபெயர்ப்பு என்றும் பலவற்றை எழுதி வருகிறார். வல்லமை மின்னிதழில் 'இந்த வார வல்லமையாளர்' ஆக ஒருமுறை கௌரவிக்கப்பட்டவரும்கூட.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com