தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன்
இவரது வலைப்பதிவு 'சும்மா' நன்கு அறியப்பட்ட ஒன்று. கவிஞராகத் துவங்கி, வலைப்பதிவராக வளர்ந்து, பத்திரிகையாளராக, எழுத்தாளராக இன்று கோலோச்சிக் கொண்டிருப்பவர் தேனம்மை. பிறந்த ஊர் காரைக்குடி. மதுரை ஃபாத்திமா கல்லூரியில் இளங்கலை வேதியல் படிக்கும்போதே கல்கி, புதியபார்வை, வைகறை, பூபாளம் போன்ற இதழ்களில் எழுதி கவிஞராகப் பெயர்பெற்றார். திருமணமானபின் முழுநேர இல்லத்தரசி ஆனார். கணவர் லக்ஷ்மணன் வங்கியில் உயரதிகாரி. மகன்கள் திருவேங்கடநாதன், சபாரெத்தினம் இருவரும் பொறியியலாளர்கள்.

மகன்கள் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்ததும் எழுத்தார்வம் மீண்டும் முகிழ்த்தது. பேட்டிக்கட்டுரை, சிறுகதை, கவிதை என்று படைப்புகளைத் தந்தவண்ணம் இருக்கிறார். நான்கு நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

'சாதனை அரசிகள்' என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு, வாழ்க்கையில் போராடி நிமிர்ந்த பெண்களின் வெற்றிக்கதைளாகும். 'ங்கா' அழகான குழந்தையின் புகைப்படங்களோடு கூடிய கவிதைத்தொகுப்பு. 'அன்ன பட்சி' என்ற தலைப்பில் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 'பெண்பூக்கள்' தொகுதி வெளியாக இருக்கிறது. பாடலாசிரியர், சீரியல் எழுத்தாளர். வானொலி, தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களிலும் புகுந்து விளையாடுகிறார். இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.

"எப்படியும் சினிமாவுக்கு ஒரு பாடல் எழுதிடணும்னு வலைப்பூ எழுதவந்த ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அதுவும் ஷங்கர் டைரக்‌ஷனில், ரஹ்மான் இசையமைப்பில் என் பாடல் இடம்பெறணும்னு பேராசைகூட இருந்தது" என்று கூறும் இவரது கனவு நிறைவேறட்டும் என்று நாம் வாழ்த்துவோம்.

"ரொம்பப் பிடிச்ச விஷயம். விதம்விதமா மட்டுமில்ல. டெய்லி சமையலையே ரொம்ப ரசிச்சி செய்வேன்" என்னும் தேனம்மையின் சமையல் குறிப்புகளை நீங்களும் செய்துபார்க்க: thenoos.blogspot.in

இவரது 'பாலியல் பலாத்காரமும் ஆசிட் வீச்சும்' என்ற கட்டுரை குறிப்பிடத்தகுந்தது. கதை, கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், வாழ்க்கை அனுபவங்கள் என்று விரியும் இவரது பிற வலைப்பதிவுகளைப் பாருங்களேன்:

கோலங்கள்: muthukkolangal.blogspot.in
உணவு: thenammailakshmanan-chumma.blogspot.in
டயரிக்குறிப்பு: thenusdiary.blogspot.in

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com