யாஹு ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ராகவன்
பிரபாகர் ராகவன் என்ற தமிழர் யாஹு(Yahoo) ஆராய்ச்சி மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகவன் ஐ.ஐ.டி. சென்னையில் மின்சாரவியலில் பட்டம் பெற்ற பின்னர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றுள்ளார்.

ராகவன் ஐ.பி.எம். நிறுவனத்தின் ஆல்மடன் (Almadan) ஆராய்ச்சி மையத்தில் 14 ஆண்டுகள் ஆராய்ச்சியாள ராகப் பணி புரிந்தார். அதன்பின் வெரிடி என்ற அமைப்பில் அதன் முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தார்.

கணினி எந்திரக் கழகத்தின் சஞ்சிகைக்கு (Journal of Association of Computer Machinery) இவர் பிரதம ஆசிரியர். மேலும் கணினி தொடர்பாக நூற்றுக்கும் மேலான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை இவர் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய 'Randomized Algorithms' என்ற நூல் பல பல்கலைக்கழகங்களில் பாடப் புத்தகமாக உள்ளது. டென்னிஸ், பேட்மின்டன் விளையாட்டுகளில் இவருக்கு ஈடுபாடு அதிகம்.

ஒரு பேட்டியில் ராகவன் கூறினார், ''இந்த பதவியை ஏற்றுக்கொள்வதற்க முன், நான் பலமுறை தயங்கினேன். ஆனால் நான் எடுத்த அநேக முடிவுகள் அதிர்ஷ்டவசமாக நல்லதாகவே அமைந்தது குறித்து பெருமைப்படுகிறேன். நான் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ஆங்கில இலக்கியப் படிப்பில் ஆர்வமாக இருந்தேன். அப்படி நடந்திருந்தால் எத்தகைய தவறைச் செய்திருப்பேன் என இப்போது எண்ணிப்பார்க்கிறேன்...''

அப்படி நடந்திருந்தால், நாம் ஓர் உயர்தர ஆராய்ச்சியாளரை இழந்திருப் போம் என்பது உறுதி.

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com