Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
நலம்வாழ
மனம் ஆழ்தல் (Mindfulness)
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|மார்ச் 2017||(1 Comment)
Share:
Click Here Enlargeஅவசரமாக இயங்கும் இந்தக் காலத்தில் பலருக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணமே அவர்களது மனம்தான் என்றால் வியப்பாக இருக்கிறதா? உண்மை அதுதான். அதற்கான மருத்துவமும் மனதுக்குத்தான் செய்யவேண்டும். எப்படி என்று மருத்துவக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

மன உளைச்சல், மன அழுத்தம், நிம்மதியின்மை, படபடப்பு போன்ற உளநோய்கள் இப்போது அதிகம் காணப்படுகின்றன. இவை stress, anxiety, depression, panic attack என்று பல பெயர்களில் வழங்கப்படுகின்றன. மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்களால் இவை நிகழ்கின்றன. நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்து தேவைப்படலாம். மன உளைச்சல் என்பது வெறுமனே நாம் மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளுதல் அல்ல. இதை உடனடியாகக் கையாளாது போனால் தீவிரம் முற்றி அதனால் பல பின்விளைவுகள் வரும்.

மன உளைச்சல் நோய்க்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள விரும்பாவிட்டாலோ, நோயின் தீவிரம் அதிகமாக இல்லாவிட்டாலோ மருந்துகள் இல்லாமல் Psychotherapy மூலம் விடை காணலாம். இந்தவகைத் தீர்வுமுறையை ஒரு நிபுணர் அல்லது நண்பர், உறவினர் மூலமாகப் பெறமுடியும். அப்படிப்பட்ட சிகிச்சை வகையில் மனம் ஆழ்தல் )Mindfulness) என்ற முறை பிரபலமாகி வருகிறது. இந்த முறையை நாமே கையாளவும் முடியும். தேவைப்பட்டால் அதற்கான பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

மனம்-உடல்-நோய் தொடர்பு
உடல் உபாதையும் அதை மனம் வெளிப்படுத்தும் விதமும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இந்தத் தொடர்பு பலவேளைகளில் நோயின் தீவிரத்தையும், தீர்வு முறைகளையும் பாதிக்கிறது என்பதைப் புற்று நோயாளிகளிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதாவது ஒருவர் நேர்மறைச் சிந்தனை (Positive thinking) கொண்டிருந்தால், அது நோயின் தீவிரத்தைக் குறைத்து, சிகிச்சைகள் சரியாகச் செயல்பட உதவுகிறது. புற்று நோயாளிகளின்'Functional Status' என்பதை, அவரது மனநிலை, உடல்நிலை, குடும்ப உதவி போன்றவற்றை வைத்து அளவிடுகிறார்கள். 'எனக்கு இந்த நோய் வந்துவிட்டதே!' என்று இடிந்துபோய் இருப்பவர்களிடமும், நோயைத் திடமனதோடு எதிர்கொள்ளும் நோயாளிகளிடமும் நோயின் தாக்கம் வெவ்வேறு விதமாக இருக்கிறது. நம் மனம், உடலின் நோயைப் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்வோம். உடலில் ஏற்படும் நோய் மனதைப் பாதிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆகவே மனம்-உடல்-நோய் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

மனம் ஆழ்தல் என்றால் என்ன?
இது பெரிய தந்திர வித்தையோ அல்லது மந்திரமோ அல்ல. நடப்பதை, அந்தத் தருணத்தை, ஏற்றுக்கொள்வதே இதன் சாராம்சம். மனதை ஒருமுகப்படுத்தி நாம் இருக்கும் தருணத்தை ஒப்புக்கொண்டு அதில் மனதை ஆழ்த்துவதே இது. பல வேளைகளில் மன உளைச்சலும் அழுத்தமும், ஏதோ ஒரு பிரச்சனை வரக்கூடும் என்ற அச்சத்திலேயே ஏற்படுகிறது. நாளை என்ன நடக்குமோ என்ற பயத்தில் இன்றைய பொழுதையும் அமைதியின்றிக் கழித்துவிடுகிறோம். நேற்று நடந்ததை எண்ணி வருத்தப்படும்போதும் இன்றைய பொழுது வீணாகிறது.

இதைச் சொல்வது எளிது. பழக்கத்தில் கொண்டுவர மிகுந்த முயற்சி வேண்டும். இதற்குப் பல பயிற்சி முறைகள் உள்ளன.

உதாரணத்திற்கு, நாம் ஒரு செயலைச் செய்துவிட்டு, அதற்கான பலனுக்குக் காத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். பலன் நல்லதாக இருக்குமா இருக்காதா என்ற கேள்வியே நம்மைக் குடைந்து, மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். அதற்குப் பிறகு பலன் நல்லதாக இருந்தால்கூட மனம் மகிழ்வதில்லை. அப்படியல்லாமல், எதையும் செய்யும்பொது அதை ரசிக்கப் பழகவேண்டும். பலனுக்குக் காத்திருக்கும் அந்தத் தருணத்தை ரசிக்கவேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி, எண்ண ஓட்டத்தைச் சீர்செய்து, அதை ஒரு தியானம்போல் செய்யவேண்டும்.
மனம் ஆழ்தலின் (Mindfullnes) மருத்துவப் பலன்கள்
மன அழுத்தம் குறைதல்: Antidepressants தேவை குறையும்

படபடப்புக் குறைதல்: இதயப் படபடப்பும், பரபரவென்று செயல்பட நினைக்கும் உந்துதலும் குறைந்து மனம் அமைதி பெறும். இதனால் கோபம், வன்முறை முதலியவை குறையும்.

உடல்வலி குறைதல்: குறிப்பாக ஆர்த்ரைடிஸ், முதுகுவலி போன்றவை குறையும். மூளையில் வலிக்காக ஒரு உச்சவரம்பு இருக்கிறது. இதன் அளவு மனம் ஆழ்தல் பயிற்சிமூலம் மாறுபடும். இதனால்தான் வலியைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை ஒருவருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது.

வயிற்று உபாதைகள் குறையும். குடல் உறுத்தல் நோயியம் (Irritable bowel syndrome) உடையவர்களுக்கு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு முதலியவை மன உளைச்சலால் ஏற்படலாம்.

உடற்சோர்வு (fatigue) குறையும். காரணமின்றி ஏற்படும் சோர்வு பெரும்பாலும் மன உளைச்சலின் வெளிப்பாடே. இது குறைந்து சுறுசுறுப்பு அதிகமாகும்.

தூக்கமின்மை குறையும். தூக்கமாத்திரை எடுக்கத் தொடங்குமுன் இந்தப் பயிற்சி செய்வது நல்லது.

உடல் எடை குறையும். பல சமயம் மன அழுத்தம் தவறான உணவுகளை, அளவுக்கு அதிகமாக உண்ண வைக்கும். Minfdul Eating என்ற முறை உணவை ரசித்து உண்ண வைப்பதால், உணவின் அளவு குறைந்து எடையும் குறையும். உடல் எடை மிகவும் குறைவாக இருப்போரை இந்தப் பயிற்சி சரியான அளவில் சரியான உணவை உண்ண வைக்கும்.

நினைவாற்றல் பெருகும். மன அழுத்தம் ஞாபக சக்தியையும் பாதிக்கும். அதனால் இந்தப் பயிற்சியின் மூலம் ஞாபகசக்தி, கவனச் சிதறல் போன்றவற்றைச் சீர்படுத்தலாம்.

மனம் ஆழ்தல் பயிற்சி எப்படிச் செய்வது
முதலில் இதைப்பற்றிப் படித்துத் தெரிந்துகொள்வது நல்லது. தியானம் செய்யும் பழக்கம் இருந்தால் அதைத் தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது. இதை வலைத்தளம் அல்லது புத்தகங்களில் படித்தறியலாம். பிறகு தினமும் 5 நிமிடம் இதற்காகச் செலவிட்டு மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கவும். இதை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். எதைச் செய்துகொண்டு இருக்கிறோமோ அதில் முழுமையாகக் கவனத்தைச் செலுத்துவதே மனம் ஆழ்தல். உதாரணமாக வாகனம் ஓட்டும்போது, மனம் அங்குமிங்கும் அலையாமல் ஒருமுகப்படுத்த வேண்டும். நம்மைச் பாதிக்கும் செயலைச் செய்யும்போது அதிக கவனத்தோடு பயிலவேண்டும். உங்கள் ஊர் மருத்துவமனையில் சொல்லிக் கொடுத்தால் கற்கலாம். ஒரு சில யோகப் பள்ளிகளிலும், உடற்பயிற்சி மையங்களிலும் கூடச் சொல்லிக் கொடுப்பார்கள்.

நேற்றைய கவலைகளை மறந்து, நாளைய அச்சத்தை ஒதுக்கி, இந்தக் கணம் மட்டுமே நிஜம் என்று மனதை அதில் ஆழ்த்தி, உடல் உபாதைகளைக் குறைப்போம்.

மரு.வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline