Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
அன்னையிட்ட தீ
விகடனும் குமுதமும்
- ஜீவீ|ஜூன் 2010||(1 Comment)
Share:
வெள்ளிக்கிழமை சாயந்திரம் வரை ராஜியிடமிருந்து போனில்லை.

கோர்ட் வழிகாட்டல் கொடுத்து மூன்று மாசமாயிற்று; இதுவரை இப்படி நடந்ததில்லை. சரியா நாலு மணிக்கு ராஜியிடமிருந்து எத்தனை மணிக்கு இவன் வீட்டுக்கு வந்து குழந்தையைக் கொண்டு வந்து விடுகிறாள் என்று போன் வந்து விடும். முதல் தடவையாக இன்றுதான் போனில்லை.

மோகனுக்கு ஆயாசமாக இருந்தது. நாலரை மணிவரை கூப்பிடக் காணோம்.

என்ன ஆயிற்று இவளுக்கு...? அவனால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. நாமே ஃபோன் பண்ணிப் பார்க்கலாமா என்று அவன் நினைத்த பொழுதுதான் தொலைபேசி கூப்பிட்டது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



ராஜிதான் லைனில் இருந்தாள். அவள் குரலில் ஏகப்பட்ட பதட்டம். "ரமேஷை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது" என்று முழுசாக மூணு வார்த்தை சொல்வதற்குள் அவளுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது.

மோகன் பதறிப் போய்விட்டான்.

"என்னாச்சு?.. எங்கேயிருந்து பேசறே..." என்று தடுமாறினான்.

"ஆசுபத்திரிலேந்து தாங்க... குழந்தைக்கு திடீர்னு ஜூரம் அனலாக் கொதிக்க..."

"எந்த ஆசுபத்திரி?" என்று கேட்டு முடிப்பதற்குள் அவனுக்கு நெற்றி பூராவும் வியர்த்துவிட்டது.

"புஷ்பம் ஆசுபத்திரிங்க. ஆறாவது வார்ட். இன்னிக்கு ஸ்கூல்கூடப் போனான்" அவள் சொல்லி முடிக்கும்வரை கூடப் பொறுமையாக அவனால் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை.

"இதோ வந்திட்டேன்.." என்று போனைத் துண்டித்து, கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

புஷ்பம் ஆசுபத்திரி வழக்கமான ஆசுபத்திரி களையுடன் இருந்தது.

நினைத்துப் பார்க்கையில் எல்லாம் ஏதோ நாடகம் போலிருக்கிறது. யாரோ முதலிலேயே சீன் சீனாக எழுதி, காட்சியமைப்பு எல்லாம் தீர்மானித்துவிட்டு, இந்த இந்தப் பாத்திரங்களில் நடிக்க நீங்களெல்லாம்தான் லாயக்கு என்று நடித்துக் கொடுக்கக் கூப்பிட்ட மாதிரி...
லிஃப்ட்டிற்கு காத்திருக்கையில் 'ச்சை..' என்று வெறுத்து, ஒருவழியாக அது வந்து ஆறேழு பேர் அதில் திணிக்கப்பட்டு, ஆறாவது மாடிக்கு வருகையில் அவனுக்கு வியர்த்தது... வார்டுக்குள் நுழைகையிலேயே ராஜி எதிர்ப்பட்டாள். "என்ன செஞ்சு தொலச்சே?" என்று சீறிவிழப் போனவன், முகம் நிறைந்த கலவரத்துடன் அவளைப் பார்த்ததும் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.

ரமேஷ் கட்டிலில் ஜுர அனத்தலில். "இங்கே பார்! அப்பாடா ரமேஷ்..." என்றவனின் குரலுக்கு லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்து உடனே மூடிக்கொண்டான்.

"இப்பத்தான் டாக்டர் வந்து ஊசி போட்டுட்டுப் போனார்.... தூங்கி எழுந்திருந்தா ஜுரம் தணியும்னு சொல்லியிருக்கார்.." என்று சொன்னவளை விரோதத்துடன் பார்த்தான்.

"வழக்கம்போல ஸ்கூலுக்குப் போனான். அவன் வந்ததும், உங்ககிட்டே கொண்டு வந்து விடலாம்னு நானும் ரெடியாத்தான் இருந்தேன். வரும்போதே தலைய வலிக்குது அம்மான்னான். நெத்திலே கைவைச்சுப் பார்த்தா லேசா சுட்டது. மாத்திரை கொடுத்தேன், கேக்கலே. கொஞ்ச நேரத்லே ஜுரம் தகிக்க ஆரம்பிச்சிடுத்து. அதான், இங்கே அட்மிட் பண்ணிட்டு, உங்களுக்கு ஃபோன் செஞ்சேன்" என்று மூச்சு வாங்க ஒப்பித்த அவளைப் பார்க்கையில் அவனுக்கு லேசாகப் பரிதாபமாக இருந்தது.

"டாக்டர் என்ன சொன்னார்?"

"ஊசி போட்டிருக்கார். மாத்திரையும் கொடுத்திருக்காங்க. சாதாரண ஒவ்வாமைதான், சரியாப் போயிடும்னு சொன்னார்" என்று சொல்லிவிட்டு, ராஜி புடவைத் தலைப்பால் நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த குங்குமப் பொட்டு அழிந்து விடாமல் ஜாக்கிரதையாக வேர்வையைத் துடைத்துக் கொண்டாள். கழுத்தில் இரட்டைவடச் சங்கிலியுடன் தாலிச்சரடு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

அவன் வந்ததும்தான் அவளிடம் இருந்த பதட்டம் தணிந்து லேசான நிம்மதி ஏற்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதி.

கொஞ்ச தூரத்தில் ஸ்டெத்ஸ் மாலையுடன் நாலைந்து பேர் விவாதித்தபடி வருவது கண்ணுக்குத் தட்டுப்பட்டது. அதில் சிவப்புக்கலர் சட்டை போட்ட ஒருவரைச் சுட்டி, "அந்த டாக்டர்தாங்க நம்ம ரமேஷைப் பார்த்தது" என்றாள் ராஜி.

அதற்குள் டாக்டரே இவர்கள் இருந்த இடத்திற்கு வந்துவிட்டார். அவளைப் பார்த்து, "பிளட் ரிசல்ட்டும் பார்த்திட்டேன். பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை" என்றவர், கட்டிலில் கிடந்த ரமேஷின் நாடி பிடித்துப் பார்த்துவிட்டுத் தலை நிமிர்ந்தார். இப்பொழுதுதான் மோகனைப் பார்த்தார் போலும்.

அதற்குள் மோகனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். "நான்தான் ரமேஷின் ஃபாதர், டாக்டர்."

"அப்படியா. குட். ஒண்ணுமில்லை, கொஞ்ச நேரத்திலே, ஜுரம் விட்டுறும். தென் ஹி வில் பி நார்மல். ஓகே. கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும்" என்ற டாக்டர், மோகனைப் பார்த்து, "இன்னும் ரெண்டு வேளைக்கு மாத்திரையை மட்டும் கண்டினியூ பண்ணச் சொல்லியிருக்கேன். நான் நாளைக்குப் பாக்கறேன், அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்...

அவர் கிளம்பும்பொழுது ராஜியைப் பார்த்து, "நல்லவேளை. உடனே கூட்டி வந்து அட்மிட் செய்தீர்கள்" என்று அவள் செய்ததைப் பாராட்டுகிற மாதிரி சொன்னது, அவனுக்கு ஏதோ தான் குற்றமிழைத்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

நினைத்துப் பார்க்கையில் எல்லாம் ஏதோ நாடகம் போலிருக்கிறது. யாரோ முதலிலேயே சீன் சீனாக அழகாக எழுதி, காட்சியமைப்பு எல்லாம் தீர்மானித்துவிட்டு, இந்த இந்தப் பாத்திரங்களில் நடிக்க நீங்களெல்லாம்தான் லாயக்கு என்று நடித்துக் கொடுக்கக் கூப்பிட்ட மாதிரி இருக்கு. நடிப்பதில் ஒன்றுதலும், செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்கிற பக்குவமும் இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்கென்று ஸ்பெஷலாக காட்சியமைப்புகளில் மாற்றம் இருக்கும் போலிருக்கிறது. மற்றபடி வாழ்க்கையே அடுத்த காட்சி என்ன என்று தெரியாத நாடகமேடையாகத்தான் அவனுக்குப் பட்டது.
இன்ன காரணம் என்று சுட்டிக் காட்ட எதுவும் இல்லை. தொட்டதெற்கெல்லாம் அது எதனால் என்று தெரியவில்லை, இருவருக்கும் பிடிக்காமல் போயிற்று. கல்யாணம் ஆகிப் புதுக்குடித்தனம் ஆரம்பித்த நாளிலிருந்து இந்தக் கதைதான். அவனுக்கு விகடன் என்றால் இவளுக்கு குமுதம் என்கிற மாதிரி சின்னச் சின்ன விஷயத்திலெல்லாம் மாறுபட்ட கருத்து.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் தங்கள் சுயத்தைக் கட்டி அழுதால் இப்படித்தான் நேரும் போலிருக்கு. இருவரிடத்திலும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுத்தல் இல்லாதபொழுது அது வெடித்துச் சிதறியது. கடைசியில் பிரிந்துவிடுவது என்று தீர்மானித்து கோர்ட்வரை போனார்கள். அவர்களும் ஆனவரை சேர்த்துவைக்கப் பார்த்தார்கள். முடியாமல் போனபோது, 'ஆறுமாசம் தனித்தனியாக வாழ்ந்து காட்டுங்கள்; அப்புறம்தான் எந்த நடவடிக்கையையும் பற்றித் தீர்மானிக்க முடியும்' என்றார்கள். ராஜி அவள் பிறந்த வீட்டுக்குப் போனாள். பெற்றவர்கள் சொன்ன எந்த புத்திமதியையும் ஏற்றுக்கொள்ள இருவருக்குமே சங்கடமாக இருந்தது.

இவர்கள் இருவரும் குவிமையமாக ஒன்று சேர்ந்த ஒரே விஷயம், பெற்றெடுத்த குழந்தையிடம் பாசம் காட்டியதுதான். அவனுக்கும் பத்து வயசு முடியப் போகிறது. நான்காம் வகுப்பு படிக்கிறான். ரமேஷின் பள்ளிக்கூட நேரமும், இவர்கள் அலுவலக நேரமும் போக மற்ற நேரமெல்லாம் அவனிடம் கொஞ்சிக் குலாவுவதில் இருவருமே குறை வைத்ததில்லை; தனித்தனியான கொஞ்சல் போக, சில நேரங்களில் குழந்தையை நடுவில் வைத்து ஆளுக்கொரு பக்கமாக அணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் வரும். இருவர் முகங்களும் குழந்தையை நடுவில் வைத்து மிக நெருக்கத்தில் இருக்கும் அப்படிப்பட்ட நேரங்களில், இரண்டு பேருக்கும் இடையே ஏன் இந்த முரண்பாடு, எதற்காக இப்படிச் சண்டை போட்டுக் கொள்கிறோம் என்று இருவருக்குமே புரியாது. இருந்தும் ஏதாவது ஒரு விஷயத்தில் அடுத்த அரைமணி நேரத்தில் சண்டை தொடங்கி ஒரு பெரும் குதறலில் முடிந்துபோகும்.

அதுவும் கோர்ட் சொன்ன வழிகாட்டல்தான்; ஒவ்வொரு வாரமும் ஒருவரிடம் என்று, மாற்றி மாற்றிக் குழந்தை இருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவுக்குள் யாரிடம் குழந்தை இருக்கிறதோ, அவர் இன்னொருவரிடம் குழந்தையைத் தன் பொறுப்பில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு இதுவரை காப்பாற்றிவிட்டார்கள். எந்தத் தடவையும் இல்லாதபடி இந்தத் தடவைதான் குழந்தை ரமேஷுக்கு உடல்நிலை சரியில்லாது போய் அவனை ஆசுபத்திரியில் சேர்க்கும்படி ஆகிவிட்டது.

"ஏங்க... குழந்தை உங்களைக் கூப்பிடறாங்க" என்று ராஜியின் குரல் கேட்டு, மூலையில் ஸ்டூலில் உட்கார்ந்த்திருந்தவன், சிந்தனை கலைந்து பெட்டுக்கு ஓடி வந்தான்.

மலங்க மலங்க விழித்த ரமேஷைப் பார்த்து ஆடிப்போய்விட்டான் மோகன். "ரமேஷ், இங்கே பார்! அப்பா வந்திருக்கேன், பார்" என்று தடுமாறியவனின் சட்டை நுனியைப் பிடித்துக் கொண்டான் குழந்தை.

நான் சொல்றது ரைட்டாத்தான் இருக்கும்ங்கற மனோபாவம். சின்ன வயசிலேந்து, இன்னொருத்தருக்கு விட்டுக்கொடுத்துப் போகணும்ங்கறது தெரியாமலேயே வளர்ந்திட்டேங்க. எங்க அம்மா, அப்பா சொல்றதைக் கேட்டிருந்தாக்கூட இந்த அளவுக்கு ஆகியிருக்காது.
ஜுரம் தணியாததன் வேகம் கண்ணிலும், அனத்தலிலும் வெளிப்பட்டது. "அப்பா..." குரல் ஈனஸ்வரத்தில் குழந்தையிடமிருந்து வெளிப்பட, தலைகுனிந்து, "நான் இங்கேதாண்டா இருக்கேன்.." என்று வாத்ஸல்யத்துடன் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டான் மோகன்.

அரைகுறைக் குழறலுடன். "அப்பா! நீ எங்கேயும் போயிடாதேப்பா.." என்று கைநீட்டி மோகனின் முகம் தொட்டான் ரமேஷ்.

மோகனின் கண்கள் கலங்கி விட்டன. "எங்கேயும் போகமாட்டேன். இங்கேயே இருக்கேன், பார்!" என்று அவன் ரமேஷை அணைத்துக் கொண்டபொழுது உடம்பின் வெப்பம் அவனையே சுட்டது. ‘ஆண்டவனே!...குழந்தையைக் காப்பாற்று... அப்படியே இந்தக் குழந்தையின் ஜுரத் தகிப்பை எனக்கு மாற்றிவிடு... எந்தத் தப்பும் செய்யாத இந்தச் சின்னஞ்சிறு உயிரைக் காப்பாத்துப்பா' என்று மனசார வேண்டிக் கொண்டான் மோகன்.

அவன் கண்களில் வழிந்த நீரைத்துடைத்து விட்டாள் ராஜி. "அதான் டாக்டர் சொன்னாரே. ரமேஷுக்கு சரியாப் போயிடுங்க. நீங்க கலங்கினா, எனக்கு யாருங்க ஆறுதல் சொல்லுவா. ப்ளீஸ்.."

கொஞ்ச நேரத்தில், ரமேஷுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு தூக்கம் வந்ததோ தெரியவில்லை. சீராக சுவாசம் இழையோட, லேசாக உதடு திறந்து தூங்கும் குழந்தை கையைத் தொட்டவாறு அருகேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்துவிட்டான் மோகன். படுக்கைக்கு அருகில் சுவரில் சாய்ந்தவாறு ராஜி.

பொலபொலவென்று பொழுது விடிந்தது.

லேசான முதுகுத் தொடலில் திடுக்கிட்டு விழித்தான் மோகன். ராஜிதான். அப்படியே ஸ்டூலில் உட்கார்ந்தபடி தன்னையறியாமல் தூங்கிப் போயிருக்கிறான்.

"தூக்க மருந்து கொடுத்திருக்காங்க போலிருக்கு; ராத்திரி முழுக்க ரமேஷ் நல்லாத் தூங்கினாங்க. இப்போ ஜுரம் நல்லா இறங்கியிருக்குங்க.." என்று முகம் மலரச் சொன்னாள்.

நெற்றியில் கைவைத்துப் பார்க்கையில் மோகனுக்கும் திருப்தியாயிருந்தது.

"நீங்களும் இல்லையா? நான் ரொம்பவும் பயந்து போய்ட்டேங்க. இனிமே என்னை விட்டு எங்கேயும் போயிடாதீங்க.." என்றவளின் கண்கள் கலங்கி அவனை நெகிழச்செய்தது.

"சீ. அசடு மாதிரி அழாதே! என்னைவிட நீதான் தைர்யசாலின்னு நான் நெனைச்சிட்டு இருக்கேன். நீயே கலங்கினா, எனக்கு யார் இருக்கா, சொல்லு!" என்று மோகன் அவள் கைப்பற்றினான்.

"எல்லாம் என் தப்புதாங்க. நான் சொல்றது ரைட்டாத்தான் இருக்கும்ங்கற மனோபாவம். சின்ன வயசிலேந்து, இன்னொருத்தருக்கு விட்டுக்கொடுத்துப் போகணும்ங்கறது தெரியாமலேயே வளர்ந்திட்டேங்க. எங்க அம்மா, அப்பா சொல்றதைக் கேட்டிருந்தாக்கூட இந்த அளவுக்கு ஆகியிருக்காது" என்று குமைந்தவளை ஆசுவாசப்படுத்தினான் அவன்.

"இல்லே, ராஜி. நீ எவ்வளவோ நல்லவள்; வெகுளி. எனக்கும் இத்தனை முரட்டுத்தனம் கூடாது."

"நீங்க ஆயிரம் சொல்லுங்க, எனக்கு மனசு கேக்கலே. நமக்குன்னு யார் இருக்கா சொல்லுங்க. அப்பா, அம்மா இருக்காங்கதான்! இருந்தாலும் நாமே அப்பா அம்மா ஆகிட்ட பின்னாடி கொஞ்சங்கூட விவஸ்தையில்லாம, நம்ம குழந்தைக்கெதிராவே சண்டை போட்டிருக்கோமே? நம்மை விட்டா அதுக்குத்தான் வேறே என்ன நாதி இருக்கு? ராத்திரி பூரா நெனைக்க நெனைக்க எனக்கு மனசே ஆறலிங்க" என்று கேவியவளை, தோள் தொட்டுச் சமாதானப்படுத்தினான் மோகன்.

"சரி சரி. உனக்கு நான்; எனக்கு நீ; நமக்கு நம்ம குழந்தை ரமேஷ்! சரிதானா? முக்கோணம் போல அமைஞ்சாச்சு. அதைக் காப்பாத்திக்கறது நம்ம சாமர்த்தியம். இத்தனை காலம், யதார்த்த உலகம் புரியாம வானத்துலே பறந்தோம். இப்போதான் பூமிலே கால் பாவித்து" என்று ஏதோ தத்துவம்போல் சொல்பவனை, புரிந்துகொள்ள முயற்சிப்பது போல நிமிர்ந்து பார்த்தாள் ராஜி.

காலை டெஸ்ட்டுகளுக்காக தூரத்தில் நர்ஸ் வருவது தெரிந்தது.

"நீ வேணா பல் விளக்கிட்டு வா. நான் போய் காப்பி வாங்கிட்டு வந்திடறேன்" என்றான் மோகன்.

"இல்லே. மாமா ராத்திரி போன் பண்ணினார். வர்றதா சொல்லியிருக்கார்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மோகனின் பெற்றோர் அந்த வார்ட் கோடியில் வருவது தெரிந்தது. கூடவே ராஜியின் அப்பாவும் அம்மாவும். கைக்கூடையில் காபி பிளாஸ்க் இருப்பது பக்கத்தில் வந்ததும் தெரிந்தது.

"ரமேஷுக்கு இப்போ எப்படிம்மா, இருக்கு, தேவலையா?" என்றவருக்கு, "இப்போ பரவாயில்லைப்பா. டாக்டர் வந்து பார்த்திட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடுவார்னு நெனைக்கிறேன்" என்றாள்.

"எங்களுக்கு ரொம்பக் கவலையா போயிடுதுப்பா" என்ற ராஜியின் அப்பாவிற்கு, "நானும் ரொம்ப பயந்திட்டேன், மாமா. இப்போ எங்க கண்களும் திறந்திடுச்சி" என்று அவரை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தான் மோகன்.

கொண்டு வந்த காபி பிளாஸ்க்கை டேபிளின் மேல் வைத்த மோகனின் அம்மா, பர்சைத் திறந்து ஒரு பொட்டலம் பிரித்து அதிலிருந்த விபூதியை வேண்டிக்கொண்டே ரமேஷின் நெற்றியில் இட்டார்.

மாம்பலம் வீடு.

சோபாவின் ஆளுக்கொரு பக்கமாக மோகனும், ராஜியும் இருக்க நடுவில் ரமேஷ்.

"என்னப்பா உன் கையிலே குமுதம்! அம்மா புஸ்தகமில்லே அது?" என்று அப்பாவைத் துளைத்தெடுத்த ரமேஷிடம், "இதுகூட வெரைட்டியா நல்லாத்தாண்டா இருக்கு" என்றவனை மலங்க மலங்கப் பார்த்தான் ரமேஷ்.

"விகடன் மட்டும் என்னவாம்? அட்டகாசமாத்தான் இருக்கு" என்று அப்பாவைப் பார்த்து குறும்புடன் சொன்ன அம்மாவைப் பார்க்கையில் அதிசயமாக இருந்தது அவனுக்கு.

மோகனின் பக்கத்தில் இன்னும் நெருங்கி, ரகசியமாக அவன் கைதொட்டு தன் கைக்குள் வைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ராஜிக்கு இந்த சொர்க்கமே தன் கைக்குள் இருப்பது மாதிரியான உணர்வேற்பட்டது.

ஜீவீ,
கமிங், ஜார்ஜியா
More

அன்னையிட்ட தீ
Share: 




© Copyright 2020 Tamilonline