Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
2009ம் ஆண்டுக்கான இயல் விருது
கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2009ம் ஆண்டுக்கான இயல் விருது, தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் கோவை ஞானி (கி. பழனிச்சாமி), ஐராவதம் மகாதேவன் இருவருக்கும் இணைந்து வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது, கேடயமும் 1500 டாலர் மதிப்பும் கொண்டது. இம்முறை விருது பெறும் இருவருக்குமே தலா 1500 டாலர் வழங்கப்படுவது சிறப்பு அம்சம்.

தென்றல் மற்றும் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளையும் இயல் விருதின் புரவலர்களில் இணைந்திருப்பது நீங்கள் அறிந்ததே.

கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி. பழனிச்சாமி ஒரு தமிழாசிரியர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வருகிறார். 'இடைவிடாது இயங்கிவரும் ஆய்வறிஞர் ஞானிக்குள் தமிழ் இயங்குகிறது' என்று இவரை வர்ணிப்பார்கள். தமிழின் நவீன இலக்கியங்களை மார்க்ஸிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். நுட்பமான இலக்கிய உணர்வும், நவீன இலக்கியங்களைத் திறந்த மனத்துடன் அணுகும் பண்பும் கொண்டவர். இவர் ‘நிகழ்’ என்ற சிற்றிதழைப் பல ஆண்டுகளாக தமிழின் புதிய இலக்கியக் களமாக நடத்தி வந்தார். 24 திறனாய்வு நூல்கள், 12 தொகுப்பு நூல்கள், 4 கட்டுரைத் தொகுதிகள், 2 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களில் 'இந்தியாவில் தத்துவம், கலாச்சாரம்', 'கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை', 'தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்', 'மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்' ஆகியவை முக்கியமானவை. இவர் தமிழ்ப் பணிக்காக 'விளக்கு விருது', 'தமிழ் தேசியச் செம்மல் விருது', 'தமிழ் தேசியத் திறனாய்வு விருது', 'பாரதி விருது' ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

ஐராவதம் மகாதேவன் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். இந்திய ஆட்சிப் பணியில் 33 ஆண்டுகளும், தினமணி இதழின் ஆசிரியராக நான்கு ஆண்டுகளும் பணிபுரிந்தார். இவரது தினமணி காலத்தில் தமிழ்மொழியின் பரவலான எழுத்துபாவனை தூய தமிழ்ச்சொற்களின் அறிமுகத்தால் பெரும் மாற்றமடைந்தது. தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இவர் நடத்திய நீண்டகால ஆராய்ச்சிகளுக்காக சர்வதேசப் புகழ் இவரைத் தேடி வந்தது. கல்வெட்டு ஆராய்ச்சிகளில் இவரது உழைப்பு தொல்தமிழ் குறித்தும் பண்பாடு, வரலாறு குறித்தும் தீர்க்கமான முடிவுகளை எட்ட உதவியிருக்கிறது. இவர் நாம் வாழும் காலகட்டத்தின் மாபெரும் ஆய்வாளர் என்பதைப் பல்துறை அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பரவியது என்பதையும் அந்த நூற்றாண்டிலேயே எழுத்தறிவு தோன்றியது என்பதையும் ஆராய்ச்சி மூலம் நிறுவியிருக்கிறார். அரசவை, மேனிலை மக்கள், வழிபாட்டுத் தலங்கள் மத்தியில் மட்டுமே எழுத்தறிவு என்ற நிலை இல்லாமல் எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு காணப்பட்டது என்பது இவருடைய ஆராய்ச்சிகளின் முக்கியமான முடிவு.. இவர் எழுதியுள்ள நூல்கள் The Indus Script : Texts, Concordance and Tables (1977), Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003). இந்திய அரசு இவருக்கு 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது. தமிழக அரசின் 'திருவள்ளுவர் விருது'க்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருது வழங்கும் விழா பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.