Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நலம்வாழ
ஆசியர்களை அதிகம் தாக்கும் நீரிழிவுநோய்
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஆகஸ்டு 2016|
Share:
Click Here Enlargeதெற்காசியர்களிடையே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களிடையே உடல்பருமன் குறைவாக இருப்பவர்களிடமும் நீரிழிவுநோய் அதிகமாக காணப்படுவது ஓர் ஆச்சரியம். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆசியர்களுக்கு, குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாட்டினரிடையேயும், இந்தப் பரம்பரைகளில் வந்து அமெரிக்காவில் பிறந்து வளர்பவர்களிடையேயும் நீரிழிவுநோய் அதிகம் காணப்படுகிறது. இந்த ஆய்வுகளின் முடிவாக ஜனவரி 2015 ஆண்டில் அமெரிக்க நீரிழிவுநோய் அமைப்பு ஆசியர்களுக்கு நீரிழிவுநோய் இருக்கிறதா என்ற பரிசோதனையை முன்கூட்டியே செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. உடல் பருமனைக் கணிக்க Body Mass Index (BMI) உதவுகிறது. ஒருவர் உயரத்திற்குத் தக்க என்ன எடை இருக்க வேண்டும் என்பதை BMI உணர்த்துகிறது. இது 25க்கு மேல் இருந்தால் அது அதிகம், அவர்களுக்கு நீரிழிவுநோய் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யவேண்டும் என்பது எல்லோரும் அறிந்தது. தற்போது இந்தப் பரிசோதனையை ஆசியர்களுக்கு BMI 23க்கு மேல் இருந்தாலே செய்யவேண்டும் என்று அமெரிக்க நீரிழிவுநோய் அமைப்பு அறிவுறுத்துகிறது. (care.diabetesjournals.org/content/38/1/150)

தெற்காசியர்களில் பலருக்கு உடல் எடை அதிகமில்லாத போதும் நீரிழிவுநோய் இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம் . தற்போது உலகில் இருக்கும் நீரிழிவு நோயாளிகளில் 60% ஆசியர்கள். இதன் காரணங்களையும், இதைத் தடுக்கும் முயற்சிகளையும் பற்றிப் பார்க்கலாம்.

உடல் பருமன்
உடல் எடையை மட்டும் வைத்து ஒருவரைப் பருமன் என்று கூறமுடியாது. உடலில் எவ்வளவு சதவிகிதம் கொழுப்பு, எவ்வளவு சதவிகிதம் தசை (Muscle) இருக்கிறது என்பது முக்கியம். ஆசியர்களுக்குத் தசை குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் உள்ளது. இந்தக் கொழுப்பு குறிப்பாக உடலின் மத்தியப்பகுதியில், அதாவது வயிற்றுப்பகுதியில் இருப்பது மிகவும் முக்கிய காரணம். இதை இடுப்புச் சுற்றளவு என்று சொல்வர். உடலின் இடைப்பகுதியான தொப்புள் இருக்கும் இடத்தில் சுற்றளவு எவ்வளவு இருக்கிறது என்று அளக்கவேண்டும். இந்தச் சுற்றளவு ஆண்களுக்கு 40 அங்குலம் அல்லது 101 செ.மீ.க்கு மேலாகவும் பெண்களுக்கு 35 அங்குலம் அல்லது 88 செ.மீ.க்கு அதிகமாகவும் இருந்தால் இருதயநோய், நீரிழிவுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதை எப்படிக் கணக்கெடுக்க வேண்டும் என்பதைப் படத்தில் பார்க்கவும்.

சுருக்கமாகச் சொன்னால், ஒல்லிதான் ஆனால் தொப்பை உண்டு என்று சொல்கிறோமே அந்தத் தொப்பைதான் நீரிழிவுநோய்க்குக் காரணம்.

உடல் பருமனாக இருக்கும் எல்லோருக்கும் நீரிழிவுநோய் இருப்பதில்லை. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் இந்த நோய் வரும் அபாயம் உள்ளது. தொப்பை உடலிலிருக்கும் இன்சுலினை உபயோகிக்க முடியாமல் செய்கிறது. இவர்களுக்கு Insulin Resistance உருவாகிவிடுகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.

தசையும் கொழுப்பும்
உடலில் எவ்வளவு தசை இருக்கிறது, எவ்வளவு கொழுப்பு இருக்கிறது மீதம் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதைப் பல வழிகளில் அளக்கலாம். உடற்பயிற்சி நிலையங்களிலும், சில மருத்துவ அலுவலகங்களிலும், உடலின் குறிப்பிட்ட இடங்களைக் கணக்கெடுப்பதன் மூலமும் தெரிந்துகொள்ளலாம். இது வயதுக்கேற்பவும் பாலினத்துக்கு ஏற்பவும் வேறுபடும். இதை அறிந்துகொண்டு தசையை அதிகப்படுத்தி, கொழுப்பைக் குறைக்கவேண்டும். இதன்மூலம் இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance) குறையும்.
தவிர்ப்பு முறைகள்
உடல் பருமனை, குறிப்பாகத் தொப்பை பருமனை, குறைக்கவேண்டும். உணவில் மாவுச்சத்தைக் குறைக்கவேண்டும். இதில் அரிசி, கோதுமை போன்றவை அடங்கும்.

அந்தக் காலத்தில் நம் மூதாதையர்கள் அரிசிசோற்றை உண்டு நூறுவயது வாழ்ந்தார்களே என்று வாதிடுபவர்கள் பலர் உண்டு. அந்த மூதாதையர்கள் காரிலும், வாகனத்திலும் பயணம் செய்யவில்லை என்பதை கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் எத்தனை தொலைவானாலும் நடந்தார்கள். உட்கார்ந்தபடியே கணினியில் வேலை செய்கிறோம். அம்மியும் ஆட்டுக்கல்லும் உபயோகிப்பதில்லை. உரலில் இடிப்பதில்லை. கிணற்றில் நீர் இறைப்பதில்லை. அதனால் அவர்கள் உண்ட அரிசிச்சோற்றை அதே அளவில் உண்பது ஏற்புடையதில்லை.

பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, கம்பு போன்ற தானியங்களில் இருந்து கிடைக்கும் மாவுச்சத்தில் நார்ப்பொருள் கலந்து இருக்கிறது. இதனால் குறைவாக உட்கொண்டாலும் வயிறு நிரம்பிவிடும். இத்துடன் புரதமும் சேர்க்கவேண்டும். ஒவ்வொரு வேளையிலும் புரதம் வேண்டும். பதப்படுத்திய உணவுவகைகளை (Processed foods) உண்பதைக் குறைக்கவேண்டும்.

உடற்பயிற்சி வேண்டும். தசைகளைப் பெருக்க எடை தூக்க வேண்டும். வாரத்தில் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். மற்ற நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். தினமும் ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு எஞ்சிய 23 மணிநேரமும் உண்டு, உறங்கினால் பலனிருக்காது.

குடும்ப வரலாறு இருப்பவர்களும், BMI 23க்கு மேல் இருப்பவர்களும் இரத்தத்தில் சர்க்கரை அளவும் Hemoglobin A1C அளவும் பார்த்துக்கொள்ள வேண்டும். வருடாவருடம் பரிசோதனை செய்யவேண்டும். PreDiabetes இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருந்து, அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும். வெறும்வயிற்றில் சர்க்கரை 126க்கு மேல் இருந்தால் நீரிழிவு நோய். 105 முதல் 125 வரை PreDiabetes. அதேபோல் A1C 6க்கு மேல் இருந்தால் அபாயவிளக்கு என்பதை உணரவேண்டும்.

இளவயதினருக்கும் இதே எச்சரிக்கை இருக்கிறது என்பதை அறியவேண்டும். முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேலானவர்களை மட்டுமே தாக்கிவந்த நோய், நமது பழக்கவழக்கங்கள் மாறிவிட்டதால் முப்பதுகளிலும் இருபதுகளிலும் இப்போது எட்டிப் பார்க்கிறது.

இருமலும் ரோகமும் முயலக வாதமும் என்று பாடிய அருணகிரி நாதர் பதினைந்தாம் நூற்றாண்டியிலேயே நீரிழிவு நோய் பிறவிதோறும் தன்னை நலியாதிருக்க வேண்டியிருக்கிறார். அதை வேண்டுதலோடு நிற்காமல் அதற்கான தற்காப்பு முறைகளையும் கையாளவேண்டும்.

நலமுடன் வாழக் கொஞ்சம் வாயையும் வயிற்றையும் கட்டுவோம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்
Share: 




© Copyright 2020 Tamilonline